பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்!
சென்னை: ஊர் ஊராக சென்று நடத்தி கொண்டிருக்கும் கிராம சபை கூட்டம் திமுகவுக்கு எந்த அளவுக்கு பலத்தை தரபோவது? என்பதுதான் கேள்வி.
கிராம மக்களை சந்தித்து பேசுவதும், குறைகளை கேட்பதும் அரசியல் தலைவர்களுக்கு எப்போதுமே இருக்கக்கூடிய கடமை. ஆனால் இப்படி கிராமத்துக்கு போய் மக்களை சந்திப்பது கூட தேர்தலை மையப்படுத்தி நடந்து கொண்டிருப்பது சமீப கால அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், கிராம சபை கூட்டங்களை நடத்தி வருவது எதற்காக? இதனால் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்று திமுக நினைக்கிறது தெரியவில்லை. இதுவரை நடத்தி வந்த கூட்டங்கள் முழுக்க முழுக்க அதிமுக, பாஜகவை விமர்சனம் செய்ததே நடந்திருக்கிறது.
ஓட்டு போடுங்கள்
கூடவே திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்ற முழக்கமும் கிராம சபை கூட்டங்களில் கேட்க முடிகிறது. கிட்டத்தட்ட எல்லா கிராம சபை கூட்டங்களிலும் ஸ்டாலின் பேசுவது ஒரே மாதிரியாக இருக்கிறது. இப்படித்தான் அடுத்த கிராம சபை கூட்டத்திலும் பேசப்போகிறார் என்றும் முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால் ஒரு தாக்கத்தையும் பேச்சின்மூலம் கிராம மக்களிடையே ஏற்படுத்த முடியாது.
கட்சி தலைவர்
அதேபோல, கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு உடனேயே தீர்ப்பதானால் இந்த கூட்டங்களை திமுக தாராளமாக நடத்தலாம். ஆனால் குறைகளும் தீர்ந்தபாடில்லை. வெறும் மனுக்களை பெறுவதற்கு எதற்காக ஒரு கட்சி தலைவர் இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு செல்ல வேண்டும்? அந்த மனுக்களையும், குறைகளையும் கேட்ட ஸ்டாலின் "ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கிறேன்" என்று உறுதி அளிக்கிறார். அப்படியென்றால், இப்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில், எதற்காக இப்படிப்பட்ட கிராம சபை கூட்டங்கள்?
நிர்வாகிகள்
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிய கட்சி திமுக. மக்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாக சென்றுதான் ஒரு கட்சி தலைவர் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கிராமத்துக்கும் நிர்வாகிகளை நியமித்து அக்கிராமத்தின் பிரச்சனைகளை களைய திமுகவால் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?
காத்திருக்கிறார்கள்
கண்டிப்பாக முடியும்... கோடிக்கணக்கான தொண்டர்களை பெற்றுள்ள திமுகவிற்கு எத்தனையோ பேர் சேவைக்காகவும், பொறுப்புக்காகவும், கட்சியின் நலனுக்காக பாடுபடவும் காத்திருக்கிறார்கள். அதனால் இருந்த இடத்திலிருந்தே எந்த பிரச்சனையையும் திமுக நினைத்தால் களைய முடியும்.
மனுக்கள்
அப்படி இல்லையென்றால், குறைந்தபட்சம் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களையாவது மாவட்டங்களில் நடத்தி முடிக்கலாம்.பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று தெரிந்தும் கிராம மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி கொண்டிருப்பது வீணான செயல்தான். ஸ்டாலினுக்கு இதனால் ஒரு மவுசும் கூட போவது கிடையாது.