எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு
சென்னை: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ . 2.5 கோடியிலிருந்து ரூ 3 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இதில் கடந்த மார்ச்சில் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
கடைசி தினமான இன்று சட்டசபையில் கூட்டுறவு, பொதுப்பணித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அச்சமயம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்பட்டு வரும் ரூ 2.5 கோடியை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டனர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் பல்வேறு எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ 50 லட்சம் உயர்த்தி ரூ 3 கோடியாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வரவேற்றனர்.