மோதல் ஓவர்.. தினகரனுக்கு பின்னடைவு.. முதல்வரை சந்தித்த கருணாஸ்! சபாநாயகர் மீதான நோட்டீஸ் வாபஸ்
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் எம்எல்ஏ கருணாஸ்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், கடந்த சட்டசபை தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இதையடுத்து ஜெயலலிதாவை வாயார புகழ்ந்து பேசி வந்தார். ஆனால், அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும், தினகரன் அணி என இரண்டாக பிளவுபட்ட போது அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர் கருணாஸ்.
கூவத்தூரில் நடைபெற்ற ரகசியங்களை வெளியிட்டு விடுவேன் என்று அதிமுக தலைமைக்கு எதிராக நேரடி மிரட்டல் விடுத்தார். தினகரனுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
முதல்வர் பற்றி பேச்சு
எல்லாவற்றுக்கும் உச்சம் வைத்தது போல பொது மேடை ஒன்றில் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் அடித்து விடுவேன் என்று பயப்படுகிறார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். முதல்வர் குறித்து காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்காக கருணாஸ் மீது காவல்துறை புகார் பதிவு செய்து தேடி வந்தது. இதனால் கருணாஸ் அப்படியே கப்சிப் ஆனார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இருப்பினும் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி, மனு ஒன்றை அளித்திருந்தார் கருணாஸ். சமீபகாலமாக, பேட்டி அளிக்காமல் தவிர்த்து வந்த கருணாஸ், இன்று திடீரென தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மனு வாபஸ்
மேலும், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கேட்ட மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி முதல்வரிடம் அப்போது மனு ஒன்றையும் அளித்தார். அரசின் இந்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமி உடன் இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. அவருடன் இணக்கமாக செல்வதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தினகரனுக்கு பின்னடைவு
முதல்வரை, கருணாஸ் சந்தித்தபோது அவருடன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாஸ் இதுவரை தினகரன் ஆதரவாளராக அறியப்பட்டவர். திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்போது கருணாஸ் முதல்வருடன் இணக்கம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.