எங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் தேவை.. எம்எல்ஏ பிரபு உறுதி
கட்சிக்கு ஆளுமை மிக்க தலைவர் தேவை என எம்எல்ஏ பிரபு வலியுறுத்தி உள்ளார்
சென்னை: "எங்களை கூப்பிடல.. அதான் வரலை.. ஆனால் அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைவர் வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம்" என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை, ஆளுமைமிக்க தலைவர் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா அன்று கொளுத்தி போட்டது, அதிமுக வட்டாரத்தில் பெரிய சலசலப்பை உண்டாக்கி விட்டது.
இதையடுத்து யார் அந்த ஒற்றை தலைமை என்பதில் சிக்கல், போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை கழகத்தில் தற்போது நடந்து வருகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கூட்டத்தில் மிக முக்கியமான எம்எல்ஏவான குன்னம் ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை.
அதேபோல, இரண்டு அமைச்சர்களான ஓஎஸ் மணியன், சிவி சண்முகமும் கலந்து கொள்ளவில்லை. உடல்நலக்குறைவால் கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாக ராமச்சந்திரனும், அண்ணன் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ளதால் வர முடியவில்லை என்று சிவி சண்முகமும் விளக்கம் அளித்துள்ளனர்.
என்னது.. செங்கோட்டையன் பொதுச்செயலாளர்..ஆ..ஆ..ஆ.. காரைக்குடியில் பரபரக்கும் போஸ்டர்!
அதேபோல, அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களான கலைச்செல்வன், பிரபு மற்றும் இரத்தின சபாபதி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது சம்பந்தமாக எம்எல்ஏ பிரபு சொல்லும்போது, "அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு, எங்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
அதிமுகவில் நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைமைதான் தற்போதைய தேவை" என்றார்.