போலி தாடி ஒட்டிக் கொண்டு.. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதியா.. கொந்தளிக்கும் ஜவாஹிருல்லா!
தமிழக போலீசாருக்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிப்பதா? முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியை செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு... முஸ்லிம் வெறுப்பு ஒத்திகையை நடத்திய சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதற்கான நடவடிக்கைகளில் மிக தீவிரமாக போலீசார் இறங்கி உள்ளனர்.
அது தொடர்பானவர்களும், சந்தேகத்திற்கு இடமானவர்களும் கைதாகி வருகின்றனர். இதில், தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாருமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்ற வதந்தியை பரப்பப்பட்டு வருகிறது.
ஒத்திகை நிகழ்ச்சி
இந்நிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது.. அதாவது திடீரென தீவிரவாதிகள் நுழைந்துவிட்டால், நம்மை எப்படி காத்து கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அது.. போலீசார் இந்த ஒத்திகையை நடத்தினர்.. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் பங்கேற்றனர்.
ஆஸ்பத்திரி
ஆஸ்பத்திரியில் தீவிரவாதி ஒருவர் சிகிச்சை பெறுகிறார்.. அவரை கடத்தி செல்ல சக தீவிரவாதிகள் 4 பேர் அங்கு திபுதிபுவென உள்ளே ஆயுதங்களுடன் நுழைகின்றனர். நோயாளிகளை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறார்கள். இந்த தகவலறிந்த கமாண்டோ படை வீரர்கள் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை சுட்டு ஆஸ்பத்திரியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். இதுதான் அந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!!
போலி தாடி
அப்போது போலீசார் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்தான் என்று சித்தரிக்கும் வகையில், முஸ்லிம்களின் மத அடையாளமான தாடியை ஒட்டிக் கொண்டு விழிப்புணர்வு நடத்தி உள்ளதாக தெரிகிறது. இது இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொதிப்பை தந்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஜவாஹிருல்லா
அதில், "தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மாக் டிரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நடத்திக்காட்டப்பட்டது. இந்த ஒத்திகையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியை செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கண்டிக்கிறேன்
பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்த நடத்தப்பட்ட நிகழ்வில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் எனச் சாமானிய மனிதர்களின் மனதில் பதிய வைத்து முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை வெறுக்கவும், அவர்களை பொது இடங்களில் சந்தேகப் பார்வையுடன் பார்க்கவும் இந்த ஒத்திகை உதவும். எனவே, இந்த முஸ்லிம் வெறுப்பு ஒத்திகையை நடத்திய சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.