கொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்
தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: கொரோனாவைரஸ் தொற்று பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதா? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.. கொரோனாவை எதிர்த்து எல்லாரும் வேறுபாடுகளை களைந்து போராடி கொண்டும், ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொண்டும் வரும் நேரத்தில், இப்படி சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா காட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லியில் உள்ள மேற்கு நிஜாமுதினில் இஸ்லாமிய சமூகத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தாப்லிக் இ ஜமாத் மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த சிலருக்கு கொரோனா தொற்று இருந்ததை தொடர்ந்து, வைரஸ் தொற்று பலருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் நடந்த மாநாட்டிற்குப் பங்கேற்றவர்களை அதிகாரிகள் தேடி கண்டுபிடித்து, கொரோனா சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை
இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் நடத்தப்பட்டதில், வெறும் 74 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு
இதனிடையே, முஸ்லிம்கள் தான் கொரோனாவை தமிழகத்தில் இறக்குமதி செய்கிறார்கள் என்ற தொனியில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி ஒரு அரசே செய்தி வழங்கியிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக அரசுக்கு எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன.. பொய்யான அவதூறு பிரச்சாரங்கள் மூலம் தமிழக மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் புலம்பல்கள் எழுந்துள்ளன.
ஜவாஹிருல்லா
அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. கொரோனாவை எதிர்த்து மக்கள் ஒன்றாக சேர்ந்து போராடி வரும் நிலையில், சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா ஆவேசமடைந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
நோய்க்கிருமி
அதில் அவர் சொல்லி உள்ளதாவது: ''தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோய்க் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மிகக் குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாதிப்பு
அரசின் முதல் ஆண்டி வரை மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் தாக்கும் வல்லமை கொண்ட கொடிய நோய்க் கிருமியாக கரோனா அமைந்துள்ளது. தமிழகத்தில் இந்த நோய் பாதிப்புடன் காஞ்சிபுரம், சென்னை , கோவை, நெல்லை, திருப்பூர் முதலிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும் தப்லீக் குழுவின் தொடர்பினால் இந்த நோய்த் தொற்றைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை, சேலம், ஈரோடு முதலிய மாவட்டங்களில் கரோனா நோயின் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத் எனப்படும் மதக்குழு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்பது உண்மைதான்.
பரிசோதனை
இவர்கள் அனைவரும் ஒரே மதத்தினர் என்பதும் இவர்களால் வேறு எந்த மதத்தினரும் பாதிக்கப்படவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. இந்தக் குறிப்பிட்ட மதக் குழுவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள், தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உட்பட முஸ்லிம் சமூகச் சான்றோர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி அதன் காரணமாக 99 விழுக்காட்டினர் மருத்துவப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
கண்டிக்கத்தக்கது
இந்த உண்மைகளையெல்லாம் நன்கு தெரிந்த தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட மதக்குழுவினர் மீது மட்டும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் போல் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
மன்னிப்பு
கொரோனாவை எதிர்த்து அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்து மக்கள் போராடிக் கொண்டும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் இருக்கும் நிலையில் சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறேன'' என்று தெரிவித்துள்ளார்.