சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மக்களுடன் மட்டுமே கூட்டணி... கமல்ஹாசன் அறிவிப்பு
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கழகங்களுடன் கூட்டணி அமைக்காது என்று மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்களுக்கு வந்து விட்டதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பரபரப்பாக இயங்கி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை தி. நகரில் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
கடந்த இரு நாட்களாக கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றன.
கமல் ஆலோசனை
சட்டசபை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மக்களுடன் கூட்டணி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சட்டசபைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை என்று அறிவித்தார். மக்களுடன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்றும், மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்து விட்டதாகவும் கூறினார்.
மநீம நிலைப்பாடு
டெல்லி சட்டசபை தேர்தலில் போது டெல்லியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் போல தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்
கட்சியை வலுப்படுத்திய மநீம
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. குறிப்பாக கோவை, தென் சென்னை, வட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.