வேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்??
வேலூரில் மநீம, அமமுகவின் ஓட்டுக்களை அள்ள போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
சென்னை: கமலும், தினகரனும் வேலூர் தொகுதியில் போட்டியிடாத அவர்களின் வாக்குகளை அள்ள போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு வரை, நாளை வேட்பாளரை அறிவித்து விடுவோம் என்றுதான் கமல் சொல்லி வந்தார். ஆனால் மய்யம் சார்பில், போட்டியிடவில்லை என்று திடீர் அறிக்கை வெளியிடப்பட்டது.
"தொகுதியில் பணம் கைப்பற்றப்படுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது... மீண்டும் அதே வேட்பாளர்கள். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக என்ன விசாரணை நடந்தது?" என்று கேள்வியை எழுப்பி ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போட்டியிடவில்லை என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி
ஆனால் மய்யம் கேட்ட இதே கேள்வியை இன்னும் சொல்லப்போனால் இதைவிட நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்டது நாம் தமிழர் கட்சிதான். "தப்பு பண்ணவங்க மேல தகுதி நீக்கம் செய்யுங்கள், அதே வேட்பார்கள் கூடாது, அப்பா சேர்த்து வைச்சதை தொகுதியில் செலவு பண்றவங்களுக்கு என்ன வலி தெரியும், நாங்கள் என்ன அப்படியா?" என்று அன்றே எதிர்த்தார்கள், இன்றும் எதிர்க்கிறார்கள். ஆனாலும் துணிந்து இரு பிரமாண்ட கட்சிகளுடன் மோதவும் தயாராகி விட்டார்கள். இந்த துணிச்சலுக்கு தனி பாராட்டுக்கள்!
திராவிட கட்சி
மய்யம் போட்டியிடாத பட்சத்தில் அக்கட்சியினரின் வாக்குகளை அள்ள போவது யாராக இருக்கும். நிச்சயம் நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கக்கூடும். காரணம், கொள்கை ரீதியான முரண்பாடு, மநீம, நாம் தமிழருக்கு இருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு ஓட்டளிக்க இவர்கள் தயாராக இல்லை.
ஏழை விவசாயிகள்
திராவிட கட்சிகள் என்றாலே காததூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள் இரு கட்சியினரும். முடிந்த தேர்தலில் கமலுக்கு விழுந்த ஓட்டுக்கள் எல்லாமே புதுமுகங்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், திராவிட கட்சிகளை பல காலம் நம்பி ஏமாந்த கிராமப்புற ஏழைகள்தான்!
சீமான்
சீமானையும், அவரது கொள்கையும் பிடித்திருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஓட்டுக்களை பதிவிடவே வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் ஓபனாக சொல்லப்போனால் மய்யத்தின் ஓட்டுக்களை அள்ள போவது நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
டிடிவி தினகரன்
மற்றொரு புறம், எல்லாரையும் தூர தள்ளிவிட்டு புயலென மேலே வந்த டிடிவி தினகரன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்லிவிட்டார். இதற்கு சின்னம் காரணம் சொல்லப்பட்டாலும், உண்மை காரணம் தேர்தலை சந்திக்க அமமுக தயாராக இல்லை என்பதாகத்தான் உள்ளது. மேலும் பெரும்பாலான அமமுகவினர், தாய்க்கழகத்தில் இணைந்துவிட்ட நிலையில், நிச்சயம் அமமுகவின் ஓட்டுக்கள் அதிமுகவுக்குதான் விழ வாய்ப்புள்ளது.
இருமுனை?
ஆக மொத்தம், வேலூரில் மும்முனை போட்டியில் உள்ள அதிமுகவுக்கும், நாம் தமிழருக்கும் மநீம, அமமுகவினால், சாதகமான வாக்குகள் விழுந்தாலும், திமுகவுக்குதான் எந்த பலனும் இல்லாமல் போகும் நிலை உள்ளது!