அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!
பெரம்பூரில் வெற்றிவேலை பின்னுக்கு தள்ளியது மநீமய்யமும், நாம் தமிழர் கட்சியும்
Recommended Video
சென்னை: ஒரு வேளை இதுதான் மாற்றமோ.. மாற்றம் இப்படித்தான் அதிரடியாக இருக்குமோ என்று எண்ண வைத்து விட்டது பெரம்பூர் சட்டசபை இடைத் தொகுதி தேர்தல் முடிவுகள். காரணம், பெரும் ஜாம்பவனாக வலம் வந்த பி. வெற்றிவேல் இங்கு பெற்றுள்ள வாக்குகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் வெற்றிவேல். ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வெற்றிவேல். அதிமுகவின் முக்கிய தளபதிகளில் இவரும் ஒருவர். வட சென்னை அதிமுகவின் வலிமையான தூணாகவும் விளங்கியவர்.
இந்த நிலையில் அதிமுக உடைந்த பிறகு தினகரன் அணிக்குப் போய் விட்டார் வெற்றிவேல். இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படவே அங்கு இடைத் தேர்தல் வந்தது. இதில்தான் அதிர்ச்சிகரமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்?
2-வது இடம்
பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் அபார வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை அதிமுக பிடித்துள்ளது. அதிமுகவிடமிருந்து இந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. இப்போது இது முக்கியமல்ல.
பெரும் அதிர்ச்சி
பி.வெற்றிவேல் இந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனைதெரியுமா வெறும் 6274 தான். இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தொகுதியின் ஜாம்பவான். வடசென்னையின் நாயகன், அமமுகவின் முக்கிய தலைவர், பணம் காசுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் வெறும் 6 ஆயிரத்து சொச்சம் ஓட்டு மட்டுமே வாங்கி டெபாசிட்டைப் பறி கொடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
அங்கீகாரம்
அமமுக என்ற அடையாளத்தையும், வெற்றிவேல் என்ற அங்கீகாரத்தையும் மக்கள் மொத்தமாக பறித்து விட்டதாகவே கருத முடிகிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால் இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் வாங்கிய வாக்குகள்.
அசத்தல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி 20 ஆயிரத்து 508 வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளார். இது மிகப் பெரிய விஷயம். அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெர்லின் சுகந்திக்கு 8585 வாக்குகளை கொடுத்துள்ளனர் மக்கள். இதுவும் பெரிய விஷயம்தான்.
புதிய சிந்தனை
மக்கள் பழையவற்றை நிராகரிக்கத் தொடங்கி விட்டனர். ஆள் பார்த்து வாக்களித்த காலம் போய் விட்டது. சின்னம் பார்த்து வாக்களித்த காலம் போய் விட்டது. சிந்தித்து வாக்களிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையே பெரம்பூர் தொகுதி தேர்தல் முடிவு காட்டுகிறது. இது ஒரு சின்ன உதாரணம்தான்.. ஒவ்வொரு தொகுதியிலும் மாற்றத்தை மக்கள் விரும்பியதை உணர முடிகிறது என்பதுதான் இந்த தேர்தலின் முக்கிய சாராம்சம்.