கமல் நல்லவர் தான்... நம்மவர்தான்.. ஆனால்... விவரிக்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள்!
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்கள் கமலுக்கு கல்தா கொடுத்து விட்டு பாஜகவில் நேற்று இணைந்தனர்.
இந்நிலையில் அவர்களின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் குறித்து ஒன் இந்தியா தமிழ் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு கேட்கப்பட்டபோது அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரன் இது குறித்து தெரிவித்த விவரம் பின்வருமாறு;
''பிரதமர் மோடி ஊழல் இல்லாத அரசை வழிநடத்தி வருகிறார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது, அதனால் நான் விரும்பி எடுத்த முடிவு. மற்றபடி மக்கள் நீதி மய்யத்தில் எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கமல் மீது இன்றும் சரி என்றும் சரி மரியாதை வைத்திருப்பவன் நான். ஆகையால், கமல் மீது அதிருப்தி ஏற்பட்டதால் இந்த முடிவை எடுக்கவில்லை.
தமக்கும் ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்பதை அன்றே அறிந்த திருவள்ளுவர்.. ப சிதம்பரம் ட்வீட்!
இப்போது எனக்கு 61 வயது ஆகிறது, இன்னும் ஆக்டிவாக இயங்க முடியும் என்றால் 5 வருடமோ 6 வருடமோ தான் அரசியலில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அதற்குபிறகு இயற்கையாகவே அந்த நிலை மாறிவிடும். 35 வயதுடையவர்களோ, 40 வயதுடையவர்களோ கமல்ஹாசன் பின்னால் இருந்து செயல்படலாம், கமல் கையில் ஆட்சி அதிகாரம் வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். இதை நான் சொல்லவில்லை, களயதார்த்தம் அப்படித்தான் உள்ளது. ஆகையால் என்னால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு பொறுமை காக்க முடியாது. நம்மை சார்ந்துள்ள மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும். மற்றபடி கமல் மீதோ மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீதோ நான் எந்த குறையையும் கூற விரும்பவில்லை.
நான் கட்சிப் பொறுப்பு கேட்டோ, யாரை பற்றியும் புகார் கூறவோ இதுவரை கமலை சந்தித்ததில்லை. மறைந்த இயக்குநர் பாலசந்தர் மகனும் நானும் கல்லூரித் தோழர்கள், அப்படித்தான் கமலின் அறிமுகம் முதன் முதலில் எனக்கு கிடைத்தது''.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீ காருண்யா, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை விவரித்தாவது;
''கமல் மீது எந்தப் புகாரையும் கூற விரும்பவில்லை, அவர் தான் அரசியலில் அறிமுகத்தை கொடுத்தார். ஆனால் அங்கிருக்கக் கூடிய சிலரின் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. உடன்பாடு இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது சரியாக இருக்காது என்பதால் இப்போது அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறேன். கமல் சாருக்கு அடுத்தக்கட்டமாக உள்ள அனைத்து நிர்வாகிகளும் முறையாக செயல்படவில்லை. அவருக்கு நல்ல டீம் அமையவில்லை என்பது தான் எனக்கு வருத்தம். கட்சியில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு கமலுடன் இருப்பவர்கள் நிறைய தடைகள் விதிக்கிறார்கள்.. இதைப்பற்றி நான் இன்னும் பேச விரும்பவில்லை.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்தவுடன் பாஜகவில் தான் நான் இணைய விரும்பினேன். ஏனென்றால் அந்தக் கட்சியில் தான் ஊழல் செய்யாத தலைவர்கள் இருக்கின்றனர். அதனால் நான் யோசித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்திருக்கிறேன்''.