2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்
சென்னை: இரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கு நல்லது செய்யாமல் கமிஷன் வாங்கிக் கொண்டு மட்டுமே செயல்படுவதாகச் சாடியுள்ள மக்கள் நீதி மைய தலைவர் கமல், இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்!
கமல் பேச்சு
இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூடியிருந்த மக்களிடையே பேசிய கமல், "வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று. இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.
அதே குட்டை அதே மட்டை
அடிப்படையிலிருந்து மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என நாம் விரும்புகிறோம். நேர்மையான அவர்களுக்கு வாக்களியுங்கள் மாறி மாறி அவருக்கு வாக்களிப்பதில் இருந்து மீண்டு வாருங்கள். இரண்டு கட்சிகளுக்கும் போட்டிப்போட்டுக் கொண்டு நல்லது செய்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த கட்சியில் இருந்து 33 பேர் இப்போது ஆளும் கட்சிக்கு வந்துள்ளனர். சுற்றிச் சுற்றி நீங்கள் அதே நபர்களுக்கே ஓட்டுப் போட்டு வருகிறீர்கள். காமராஜர் சொன்னது போல 'அதே குட்டை அதே மட்டை' தான்.
ஆதார சேவைகள்
இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது உங்கள் ஆதார சேவைகள் பூர்த்தி செய்ய உதவுவது. சாலைகளை முறையாக வைத்திருக்க, சாக்கடை பராமரிப்பது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே பூர்த்தி செய்யவே இந்த உள்ளாட்சித் தேர்தல். இதைக் கிராம சபை மூலமே நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதைத் தான் மக்கள் நீதி மய்யம் தொடக்கம் முதல் வலியுறுத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றம் முடிவு
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும ஒரு ஆலை வேண்டாம் என்று கிராம சபையைக் கூட்டி நீங்கள் முடிவெடுத்துவிட்டால் போதும். உச்ச நீதிமன்றம் கூட கிராம சபை எடுத்த முடிவைத் தான் வழிமொழியும். அந்த அளவுக்கு பலம் வாய்ந்தது கிராம சபை கட்டமைப்பு. அதைத் தான் உங்கள் கையில் எடுங்கள் என மக்களிடம் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், அதை நீங்கள் கடந்த 50 ஆண்டுகளாக கமிஷன் ஏஜென்டுகளிடமே கொடுத்துவிடுகிறீர்கள். கிராமங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி.
காரணம் என்ன
அமைச்சர்கள், எம்பிக்கள் போன்ற உயர் பதவிகள் இருக்கும் போதும், அவர்கள் ஏன் உள்ளாட்சியில் பதவிகளைப் பெற வேண்டும் என அடித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழும். ஏனென்றால், இது தான் நிதியை வடித்தெடுக்கும் வடிகால். இங்கிருந்து சொட்டு சொட்டாக எடுக்கும் நிதியின் மூலம் தான் அவர்களது கஜனா நிரம்புகிறது. இதனால் தான் இந்த இடங்களில் சாதாரண மக்கள், மக்கள் பிரதிநிதிகள் வரக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
கிராம நிர்வாகி
கிராம நிர்வாகி ஒருவர் சிறப்பாக வேலை செய்தால் அவருக்கு அமைச்சருக்குக் கொடுக்கும் மரியாதையை மக்களே தருவார்கள். இந்த மரியாதை உங்களில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைக்கிறார்கள். இங்கு 1957இல் கொடுத்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றவில்லை. என்னை மாதிரி நபர்கள் அழுத்தம் கொடுக்கும் போது மட்டுமே சில நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்றபடி அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை
இடுகாட்டைக் கூட விடாதவர்கள்
அரசியல்வாதிகளிடம் இருந்து சேவை பெறுவது உங்கள் உரிமை, அதை மறந்துவிடாதீர்கள். உங்களை அரியணை ஏற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தான் முதலாளி, அதைச் சொற்ப காசுக்கு விற்றுவிடக்கூடாது. நான் வரும் வழியில் ஒரு இடத்தை பார்த்தேன். அந்த இடம் மனிதர்களைப் புதைக்கும் இடுகாடு, அந்த இடத்தில் குப்பைகளையும் கொட்டி வைத்துள்ளனர். அந்த இடுகாட்டில் குப்பையுடன் சேர்ந்தும் மனித உடல்களும் இருக்கிறது. மக்கள் நம்பிக்கை உடைப்பதாக இச்சம்பவம் அமைந்துள்ளது. இடுகாட்டைக் கூட விட்டுவைக்காத ஆக்கிரமிப்பாளர்கள் தான் இப்போது ஆட்சியாளர்களாக உள்ளனர்" என்று கடுமையாகச் சாடினார்.