எம்ஜிஆர் சென்ட்டிமென்ட்.. கமல்ஹாசன் கையில் எடுக்கும் "தரமான" யுக்தி.. இன்று தொடங்கும் பிரச்சாரம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தனது முதல் நாள் பிரச்சாரத்திலேயே அதிமுக, திமுக கட்சிகளுக்கு வலுவான மெசேஜ் அனுப்பும் திட்டத்தில் கமல் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக என்று இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் களத்தில் மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறது.
கூட்டணிக்கு தலைமை... முதல்வர் வேட்பாளர் - டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லக்காரணம் இதுதானா?
முதல் சட்டசபை தேர்தல் என்ற சுவடே இல்லாமல் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மூன்றாவது அணி
மூன்றாவது அணி அமைக்குமா, திமுகவோடு சேருமா, அல்லது அதிமுக பக்கம் போகுமா என்று மக்கள் நீதி மய்யம் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதில் மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருவதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சரியாக திட்டமிட்டால் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் மிகப்பெரிய கேம் சேஞ்சராக மாற வாய்ப்புகள் உள்ளன.
எம்ஜிஆர்
இந்த தேர்தலுக்காக கமல்ஹாசன் பல முக்கிய யுக்திகளை கையில் எடுத்துள்ளார். மேடை முழுக்க எல்இடி ஸ்கிரீன்களை வைத்து முழுக்க முழுக்க "ஜென் இசட்" வாக்குகளை கவர டிஜிட்டல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, அதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுக்கிறார். இது போக குடும்ப வேலை பார்க்கும் பெண்களுக்கு சம்பளம் என்ற அதிரடி திட்டத்தையும் அறிவித்து இருக்கிறார்.
சிக்ஸர்
இப்படி புதிய பாணியில் பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாவே எம்ஜிஆர் அரசியலை கையில் எடுத்துள்ளார். போகும் இடங்களில் எல்லாம் எம்ஜிஆர் குறித்து அவ்வப்போது பேசுவது, அவரின் திட்டங்களை புகழ்வது என்று எம்.ஜி.ஆருக்கு உணர்வுபூர்வமாக கமல்ஹாசன் முன்னுரிமை அளித்து வருகிறார்.
இன்று பிரச்சாரம்
எம்ஜிஆரின் தீவிர விசிறிகளை, அவருக்காக இப்போதும் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும் மக்களை தன் பக்கம் திருப்ப கமல்ஹாசன் முயன்று வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஆலந்தூர் தொகுதியில் இன்று கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். ஆலந்தூர் தொகுதியில் இருக்கும் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை தொடங்குவதுதான் இதில் ஹைலைட்.
ஹைலைட்
இன்று மாலை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்குவதை சென்ட்டிமென்டாக நல்ல விஷயமாக கமல்ஹாசன் கருதுகிறார். இங்குதான் எம்ஜிஆர் முதல்முதலாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் இங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இன்றைய ஆலந்தூர்தான் 1967, 1971-ல் பரங்கிமலை தொகுதியாக இருந்தது. அதன்பின் 1977ல் இது ஆலந்தூர் தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட நிலையில் 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆரை முதலில் சட்டசபைக்கு அனுப்பிய தொகுதியே இதுதான். 1971 சட்டசபை தேர்தலிலும் எம்ஜிஆர் பரங்கிமலை தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார்.
எங்கு செல்கிறார்
இதே ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடவும் கமல்ஹாசன் ஆலோசனைகளை செய்து வருகிறார். இன்று பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமவாரத்தில் இருந்து வரிசையாக ஆலந்தூர் அருகே இருக்கும் அனைத்து பகுதிகளையும் "கவர்" செய்ய உள்ளார். தன்னுடைய டிரேட் மார்க் வேனில் இவர் பல இடங்களில் நின்று பேச உள்ளார்.
பேச்சு
விருகம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ், மயிலாப்பூர் லஸ் கார்னர், நந்தனம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார். தமிழக அரசியலில் தனித்துவம் மிக்க தலைவர் எம்ஜிஆர். அவரின் தொகுதியில் இருந்து கமல்ஹாசன் இந்த பிரச்சாரத்தை தொடங்குவது அதிமுக, திமுகவிற்கு வலுவான மெசேஜாக பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் கமலின் எம்ஜிஆர் சென்ட்டிமென்ட் எப்படி வேலை செய்கிறது என்று!