"மலர" வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.. கமல்ஹாசன் பரபரப்பு டிவீட்!
கமல்ஹாசன் 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்
சென்னை: "சத்யமேவ ஜெயதே" என முழங்கும் நாட்டில் இந்த உண்மையை எங்கே போய் கேட்பது? என்று தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்போதெல்லாம் கமல் ஸ்பீடு எடுத்து வருகிறார்.. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ட்வீட்களாக தெறிக்க விட்டு கொண்டிருக்கிறார்.. ஏதாவது ஒரு பிரச்சனையை, விவகாரத்தை எழுப்பி மாநில, மத்திய அரசுகளை கேள்வி மேல் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்.
இதனால் கமலின் ட்வீட்கள் ஒரு பக்கம் மற்ற கட்சிகளுக்கு குடைச்சலாகி வருகிறது. இந்நிலையில், இன்றும்கூட கமல் 3 முக்கிய ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அவை இதுதான்:
"நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டும் போதே இடிந்து விழுந்து இருக்கிறது. மக்கள் வரிப்பணம் ரூ.336 கோடி உருமாறும் கோலம் இது. தேர்தலுக்குள் கட்டி முடிந்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்துக்கு காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாக்கும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும். நினைவிருக்கட்டும்... நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர... தக்க தருணம் இதுவே" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, மற்றுமுள்ள 2 ட்வீட்களில், "தகவல் அறியும் உரிமை" கிடைத்தபோது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம். சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது
அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகாரவர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது. சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கே போவது? சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்?யாரிடம் தகவல் கேட்பது?" என்று நறுக்கென கேள்விகளை எழுப்பி உள்ளார்.