தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்!
அரசியல்வாதி கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த போகிறார்
சென்னை: ஒரு பழமொழி சொல்லுவாங்களே.. "தேரை இழுத்து தெருவில் விட்டவன் திருவிழா கூட்டத்தில் தொலைந்தே போனானாம்! இப்படித்தான் கமலை பற்றி மற்ற அரசியல் கட்சியினர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
சினிமாவில் நடித்து கொண்டிருந்தவர் திடீரென ட்விட்டருக்குள் வந்தார். பிறகு அதிமுகவை சரமாரியாக வெளுத்தார். வெறும் ட்விட்டர் அரசியல்தான் கமலுக்கு லாயக்கு, களத்தில் இறங்க தயங்குபவர் என்று சரமாரி விமர்சனங்கள் வந்தன.
ஆனால் கொஞ்ச நாளிலேயே கட்சியை ஆரம்பித்தார். புதைந்துபோன கிராம சபை உள்ளிட்ட விஷயங்களை வெளியே கொண்டு வந்தார். கட்சியை விரிவுபடுத்தினார், இளைஞர்கள் இவரது அரசியலில் மயங்கினார்கள்.. பின் தொடரவும் ஆரம்பித்தார்கள்!
வடமாநிலங்களில் அழிந்து வரும் தாய்மொழிகள்.. ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் இந்தி
அரசியல்வாதி கமல்
பொதுவாழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர் திடீரென விஜய் டிவிக்குள் நுழைந்து ‘பிக்பாஸ் சீசன் 2' சீசனில் கலந்து கொண்டார். டிஆர்பி ரேட் நாளுக்கு நாள் எகிற, மாபெரும் வெற்றி பெற்றது நிகழ்ச்சி! அந்த சமயத்தில் அரசியல்வாதி கமல் காணாமல் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கான அரசியல் களமாக அவ்வப்போது ஆக்கி கொண்டாலும், நேரடி அரசியல் அங்கு இல்லாமல் போனது, மக்களுடனான தொடர்பு துண்டித்து போனது. தமிழகத்து அரசியலுடனான நெருக்கம் அறுந்து போனது. இதற்கு நடுவில் தன்னுடைய படம் சம்பந்தமாக வெளிநாடு போவதும் நடந்ததுண்டு!
மய்ய உறுப்பினர்கள்
இதன்பிறகுதான் கஜா புயல் தாக்கியது. இந்த நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சேவை அருமையானது. கமல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பிஸியாக இருந்தாரே தவிர, அவரது மய்ய உறுப்பினர்கள் தங்கள் களப்பணியை விடவே இல்லை. பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து, அவற்றை களைந்து கொண்டிருந்தனர். மய்ய உறுப்பினர்களின் சேவையில் அன்று முதல் இன்று வரை ஒரு குறையும் சொல்லவே முடியாது!
நெருக்கம்
கஜா புயல் பாதிப்பு சமயத்தில் கமல் கிராமம் கிராமமாக சென்றார், பஸ்ஸில் சென்று நிலைமையை பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை ஆராய்ந்தார், டீ குடித்தார்.. வழியில் சென்ற மக்களிடம் நின்று பேசினார்! அதுக்கப்பறம் மக்களுடனான நெருக்கம் காணோம். தேர்தல் வந்தது.. வழக்கம்போல் மக்களிடம் சென்றார். நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். ஆனால் எதிர்பாராத வகையில் வாக்குகளை பெற்றார். கமலின் நவீன அரசியலில் அனைத்து தரப்பு மக்களில் பெரும்பாலானோர் விழவே செய்தனர். வித்தியாச அணுகுமுறையால் அவர்களின் மனதில் இடம் பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
பெருமை
என்ன பிரயோஜனம்.. திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போக போகிறார். அப்படியென்றால், அரசியல் செயல்பாடு போன முறைபோல, இந்த முறையும் குறைந்துவிடுமா என தெரியவில்லை. போன முறைக்கும் இந்த முறைக்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது கமல் அரசியலுக்கு அறிமுகம், இப்போது அப்படி இல்லை. தமிழக அரசியலில் 5-வது இடத்தை எட்டி பிடித்துள்ளார். இது பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கே கிடைக்காத பெருமை.
தலைவர்கள்
அது மட்டுமில்லை.. வெற்றிபெற்ற, தோற்று போன பிற அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து ஓட்டு போட்டதற்கு நன்றி சொல்லி வருகிறார்கள். இதனை மய்யம் முழுமையாக செய்ததா என தெரியவில்லை. எந்நேரமும் மக்களோடு எந்நேரமும் தொடர்பில் இருந்தால் மட்டுமே ஒரு முழுமையான அரசியலை எந்த தலைவராலும் முன்னெடுத்து செல்ல முடியும்.
வெற்றிடம்
அதற்கு கமல் முழு நேர அரசியலில் இருந்தாக வேண்டும். ஆனால் அடிக்கடி திடீர் திடீர் என்று அரசியலில் காணாமல் போனால், அது அக்கட்சிக்கு முக்கியமான வெற்றிடத்தை ஏற்படுத்தி விடக்கூடும். மேலும் எதிர்க்கட்சிகளின் வாயில் மெல்லுவதற்கு அவலை தந்துவிடுவது போலவும் ஆகிவிடும்
மறந்துவிடக்கூடாது
இப்போது பிக்பாஸ் ஆரம்பிக்க போவதால், கமலின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்க போகிறது, அப்பப்போ வந்து போவாரா? அல்லது மக்களுடனேயே இருந்து அரசியல் தொடர்பில் பிணைந்திருப்பாரா? என்றெல்லாம் இனிமேல் தெரிந்துவிடும்! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. கமல்ஹாசன் அரசியலை சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளாரோ என்னவோ, அவரை தமிழக மக்களில் ஒரு சாரார் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளனர்.. அதை அவர் மறந்து விடக் கூடாது.