சூழியல் அக்கறையாளர் திஷா ரவி கடுமையான வழக்குகளில் கைது- அதிர்ச்சியளிக்கிறது- கொடுஞ்செயல்: கமல்ஹாசன்
சென்னை: கல்லூரி மாணவி, சூழலியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க், அண்மையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையானது. அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த டூல்கிட் ஒன்றை எடிட் செய்தார் பெங்களூரு சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி என கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
திஷா ரவியின் கைதுக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கல்லூரி மாணவி, சூழலியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.
பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.
கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 16, 2021
தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.
மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.