அய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி - பிறந்த நாளுக்கு கமல்ஹாசனின் கவிதை
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் அழிக்கவே முடியாத பெருங்கவிஞன் கவியரசர் கண்ணதாசன். மனிதர்களின் பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு படிநிலையையும் தமது பாடல்வரிகளால் கல்வெட்டுகளாக செதுக்கி வைத்துவிட்டு காலமாகிவிட்டார் கண்ணதாசன்.
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி.. நடந்த கண்ணதாசனே... உமை என்று இனி காண்போம்?
தாய், தந்தை, தாய் மாமன், மனைவி என அத்தனை உறவுகளின் ஆழத்தையும் நெஞ்சில் தைக்கும் அளவுக்கு வைர வரிகளால் பாடிவிட்டு பறந்து போய்விட்டார் அந்த பெருங்கவிஞன். கவியரசர் இன்று நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது பாடல்கள் நம்மில் ஒலிக்காத நேரம் ஏதும் இல்லை.
இந்த மகத்தான கவிஞனின் 94-வது பிறந்த நாள் இன்று. நான் நிரந்தரமானவன் என பாடிச் சென்ற அந்த பைந்தமிழ் கவியரசருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வழங்யிருக்கும் பிறந்த நாள் கவிதை :
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.
இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.
நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.
இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!
கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?
இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.
என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு திரு @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் கவிதை! pic.twitter.com/LVeLUbMGKb
— Raaj Kamal (@RKFI) June 24, 2020