தயார் ஆகி வரும் பிரச்சார வேன்.. தமிழகத்தை சுற்றிவர கமல் திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.
தற்போது காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வருவதால், வரும் பிப்ரவரி மாத இறுதியில் அவர் இந்தப்பயணத்தை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே பிரத்யேக முறையில் தயார் செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தில் இப்போது சில மாற்றங்கள் மட்டும் செய்யப்படவுள்ளதாம்.
புதிய முழக்கம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார வாகனத்தில் 'உங்கள் நான்' என்ற வாசகத்துடன் கரம்கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது. தொலைக்காட்சி, ஓய்வறை, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடங்கிய வகையில் அந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போதே இந்த வேன் தயார் செய்யப்பட்டிருந்தாலும், இப்போது அதன் உள்வடிவமைப்பில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.
உள்வடிவமைப்பு
கமல்ஹாசனின் பிரச்சார வாகனத்தை தயார் செய்தது கோவையில் உள்ள கோயாஸ் நிறுவனம். தலைவர்களின் பிரச்சார வாகனங்களில் உள்வடிவமைப்புகளை கட்டமைக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனம் தலை சிறந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மேம்படுத்தப்பட்ட உள்வடிவமைப்பை கமல் வாகனத்தில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வு தேவை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கமல் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட், கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி இப்போது கமலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆகையால் அவர் கால் பூரண குணம் அடைந்த பின்னர் வரும் பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
2021 தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக கமல் விடுத்த அறிக்கையில் கூட, மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் தான் என தெரிவித்திருந்தார்.இதனிடையே அதற்கான பணிகளை இப்போதே அவர் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.