உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச்செய்வோம்... இதுவே அம்பேத்கருக்கு செலுத்தும் மரியாதை -கமல்
சென்னை: உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச்செய்வதே அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 129-வது ஆண்டு பிறந்தநாளை ஒட்டி அவரை கவுரவிக்கும் வகையில் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய திருநாடு யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, பாகுபாடு பாராது அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என விரும்பியவர் அம்பேத்கர் என்றும், அவரின் கனவு தான் அரசியல் சட்டமாகி இன்று தனி மனித உரிமைகளின் கேடயமாக திகழ்கிறது எனவும் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும், அம்பேத்கருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்னவென்றால் உயர்வு தாழ்வு பேசுவோரை ஓட வைப்பது தான் என கமல் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்களால் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியவில்லை. இதனால் அவருடைய நினைவை போற்றும் வகையில் அரசியல் சாசன சட்டம் இயற்றியதில் அம்பேத்கரின் அளப்பரிய பங்கை விளக்கும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் தான் அரசு சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.