மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்
Recommended Video
சென்னை: புதிய கல்வித் திட்டத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றும், 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில்,
ஒரு தும்பியுடைய வாலில் பாராங்கல்லை கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ, அதை விட கொடுமையானது 10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டி வைப்பது. இந்தகல்வித்திட்டம் நமது குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறதே இல்லையோ, மன அழுத்தத்தை சொல்லிக்கொடுத்து விடும் எனக் கூறியுள்ளார்.
தேர்வு பயம்
பொதுத்தேர்வு திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகாது, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேர்வு பயம் தான் அதிகமாகும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஜாதிகளாலும், மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால் தான் பாதிப்பு அதிகமாக போகிறது என கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
5-ம் வகுப்பு பொதுத்தேர்வு மூலம் ஏற்படும் பாதிப்பால், ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியில்லையா என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிபோகும் என்றும், இனி தமிழகத்தில் எந்த ஒரு குழந்தையும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத்தேர்வு தான் முக்கிய காரணமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா!
கண்டனம்
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன் தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் கமல். இதுபோன்ற திட்டங்களை அரசு கைவிட்டு, பள்ளிக்கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் தனித்திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக கமல் கூறியுள்ளார்.