தேர்தல் முடிவு தந்த உற்சாகம்.. கமல் கட்சியில் பிறக்கிறது இளைஞரணி..!
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல புதிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். திமுக, அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுத்த கட்சியும் கூட. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இக்கட்சி மீதும் இருந்தது.
இக்கட்சியின் சார்பில் வித்தியாசமான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். எலைட் வேட்பாளர்கள் தவிர சாதாரணமானவர்களும் கூட வேட்பாளர்களாக களம் இறக்கி விடப்பட்டனர். ஆனால் இதுவே இக்கட்சியின் பலமாகவும் மாறியது.
தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து.. இனி முரசு சின்னமும் போச்சு.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை?
கமல் உற்சாகம்
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகத்தில் உள்ளாராம். பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று திமுக, அதிமுகவை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.
தெரிந்துதான் போட்டி
வெற்றி சாத்தியமில்லை என்பது கமல்ஹாசனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரது இலக்கு வெற்றி அல்ல. மக்கள் மனதிலும், அரசியல் அரங்கிலும் முதலில் நிலைக்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது.
வேறு இலக்கு
எனவேதான் வெற்றி கிடைக்காது என்று தெரிந்தும் கூட தேர்தலில் போட்டியிடும் முடிவை கமல் எடுத்ததாகவும், ஆனால் அவரே எதிர்பார்க்காத வாக்குசதவீதம் மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார் அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர்.
எதிர்பார்க்கலை
தனது கட்சிக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதை கமல்ஹாசன் எதிர்பார்க்கவில்லை. எனவே இப்போது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் எடுக்கவுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து
இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் இப்போதே அதில் கவனம் செலுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுவிட்டாராம் கமல்ஹாசன்.
புது அணிகள்
மேலும் கட்சியில் மகளிர் அணி, வக்கறிஞர் அணி இருப்பது போல் இளைஞரணியை உருவாக்க உள்ளாராம் கமல். அந்தப்பதவிக்கு பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பிரியதர்ஷிணியை செயலாளராக ஆக்கும் எண்ணமும் கமலுக்கு உள்ளதாம்.
இன்னும் வேகம் பிடிக்கும்
புதிய அணிகள் அமைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விடும் திட்டம் கமல்ஹாசனிடம் உள்ளதாம். லோக்சபா தேர்தலில் கிடைத்த ஆரம்பத்தை உள்ளாட்சித் தேர்தலில் வலுப்படுத்தும் வேகத்தில் உள்ளனராம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.
மாநாடுகள் நடத்தலாம்
கட்சியை வளர்க்கவும், மக்களிடம் மேலும் நிலையான இடத்தைப் பெறும் வகையில் தயாராகவும் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகிறதாம். இறுதியானவுடன் இவற்றை கமல்ஹாசன் களம் இறக்குவார் என்று சொல்கிறார்கள். இடையில் பிக்பாஸ் வேறு வந்துள்ளதால், அதையும் கூட தனது கட்சிக்கு சாகமாக மாற்ற அவர் முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.