மநீம இணையதளம் ஹேக் “அரசியல் சதி”.. யார் யார் மீது சந்தேகம்..? லிஸ்ட் போட்டு போலீசில் புகார்!
மக்கள் நீதி மய்யம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதில் யார் மீதெல்லாம் சந்தேகம் என பட்டியல் போட்டு புகார் அளித்துள்ளது மநீம.
சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அக்கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணையவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மநீம இணையதளம் ஹேக் செய்யப்பட்டதில் அரசியல் சதி இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதில் பதிவிடப்பட்ட செய்தி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இணையதளம் ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் சில தவறான நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விஷம் கக்கும் மதவாத சக்திகள்.. நேர்மை எனும் நெருப்பில் பொசுங்கிப் போவது உறுதி.. மநீம ஆவேசம்!
மநீம இணையதளம் ஹேக்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்கட்சி காங்கிரஸுடன் இணையப்போவதாக ஒரு பதிவு வெளியானது. முறையான இணைப்பு 2023 ஜனவரி 30 அன்று நடைபெறும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அந்த இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
விஷமிகள் செய்த வேலை
மநீம கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், "இதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணையும் திட்டம் எதுவும் இல்லை. எங்கள் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சென்று, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி அதில் கட்சியின் அறிக்கை போன்று தவறான செய்தியை விஷமிகள் பதிவு செய்துள்ளனர் என மநீம சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி
சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் மநீம தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்ட நிலையில், வரும் 2024 தேர்தலுக்கு, மக்கள் நீதி மய்யம் காங்கிரஸுடன் கூட்டணி குறித்த பேச்சு அடிபட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இந்த பின்னணியில் தான் மநீம இணையதளத்தில் ஹேக்கர்களால் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
போலீசில் புகார்
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில்
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுனர் கொடுத்துள்ள புகாரில், மக்கள் நீதி மையம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதில் அரசியல் சதி
இருக்கிறது. எங்களை நேரடியாக தாக்க முடியாதவர்கள் மறைமுகமாக ஹேக் செய்து தாக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் மீதெல்லாம் சந்தேகம்
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மநீம மாநில செயலாளர் அர்ஜுனர், "யார் யார் மீது எல்லாம் சந்தேகம் இருக்கிறது என்ற பட்டியலை புகார் மனுவில் கொடுத்துள்ளோம். காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.