பரபரப்பு வீடியோ.. "எங்க கிட்டயே காசு கேப்பியா" பங்க் ஊழியர்களை சரமாரி வெட்டிய கஞ்சா கும்பல்!
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்
Recommended Video
சென்னை: "என்னது... எங்க கிட்டயே காசு கேப்பியா" என்று பெட்ரோல் பங்க் ஓனரை இளைஞர்கள் சிலர் அரிவாள், கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவருக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் ஒரு தனியார் ஒருவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதன் ஓனர் பெயர் ராஜீவ்காந்தி.
வழக்கம்போல் நேற்று இரவு 10 மணியளவில் பெட்ரோல் பங்க் பிசியாக இருந்திருக்கிறது. அப்போது, பெட்ரோல் போடுவதற்காக ஆட்டோவில் 3 பேர் வந்துள்ளனர். பங்கில் இருந்த ஊழியர்கள் ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பினர். பின்னர் பணம் கேட்டதற்கு, "யாரை பார்த்து பணம் கேட்கிறே? நாங்கள் யார் தெரியுமா?" என்று தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு
பிறகு ஊழியர்களுக்கும் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் அங்கிருந்து ஊழியர்கள் 3 பேரில் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். சிக்கிய 2 பேரையும் ஆட்டோவுடன் அங்கு வைத்து விசாரித்து கொண்டு இருந்தனர்.
ஆயுதங்கள்
இதனிடையே தப்பி ஓடிய அந்த இளைஞர் திடீரென தனது நண்பர்கள் 10, 15 பேருடன் பைக்குகளில் ஆவேசமாக பங்க்குக்குள் நுழைந்தார். வந்தவர்கள் அனைவரின் கையிலும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக வெட்டினர். கண்ணாடிகளையும் நொறுக்கினர்.
கஸ்டமர்கள்
அங்கு பெட்ரோல் போட வந்திருந்த மற்ற கஸ்டமர்களையும் விரட்டி அடித்தனர். பயந்து போன பொதுமக்கள் தங்கள் பைக்குகளை அங்கேயே போட்டுவிட்டு அலறி ஓடினர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க முயன்ற ராஜீவ் காந்தியின் கையிலும் கத்தி குத்து விழுந்தது.
ஆட்டோ
பின்னர் மர்ம கும்பல் அங்கு ஏற்கனவே இருந்த தனது 2 நண்பர்களையும் ஆட்டோவையும் மீட்டு அங்கிருந்து தப்பி மறைந்தது. இதெல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் களேபரமாகிவிட்டது. வெட்டுகுத்து விழுந்த 7 பேரில் 3 பேரின் நிலைமை சீரியஸாக உள்ளது. இப்போது இது சம்பந்தமான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
வன்முறை
விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது என்றும், இதில், ஒரு கோஷ்டியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞரை பெட்ரோல் பங்கில் தேடிவந்த பொது, தேடிய நபர் கிடைக்காத ஆத்திரத்தில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மணி, அவருடைய நண்பர்கள்தான் இந்த வன்முறையில் இறங்கியது என்பது தெரிய வந்துள்ளதால் அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.