ஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று காலை சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காற்று மற்றும் மழை என சென்னை குளுமையான நகராக காணப்படுகிறது.
Recommended Video
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் அவ்வப்போது வெப்பச்சலனத்தால் மழை பெய்து வருகிறது. இதமான இந்த சாரல் மழை சென்னை நகரத்தை குளிரவைத்து வருகிறது .
இந்த மழையால் ஒரு பக்கம் சென்னை வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமத்தை எதிர்கொண்டாலும், மறுபக்கம் அருமையான குளுகுளு சூழலை அனுபவித்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஜில் ஜில்லென காற்றும் வீசியது. இதனால் மழை வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே குளிர்காற்றுடன் சாரல் மழை பெய்தது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முழுவதும் இப்படியே சாரல் மழை தொடர வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளதால் நல்ல மழை நிச்சயம் சென்னைக்கு உள்ளது.