சென்னையில் சாரல் மழை.. ஜில்லான திங்கட்கிழமை..காலையில் சட்டென்று மாறிய வானிலை
அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர், மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னரும் தை மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் பெய்த திடீர் மழையால் சென்னையின் வானிலை சட்டென்று மாறியுள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
புதிய காற்றழுத்தம்! பிப்.1, 2 தேதிகளில் இந்த மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. நீங்கள் எந்த ஊரு பாஸ்?
இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் அடுத்த 2 மணி நேரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர், மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சூளைமேடு, எம்எம்டிஏ, கோடம்பாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்பவர்கள் ஜில்லென நனைந்து கொண்டே சென்றனர்.
பள்ளி மாணவர்கள் சாரல் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர். கடந்த வாரங்களில் அதிகாலையில் குளிரும், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் திடீரென பெய்த சாரல் மழையால் சென்னையின் வானிலை சட்டென்று மாறியுள்ளது.
இன்று முதல் வியாழக்கிழமை வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.