அடடே! என்ன ஆச்சரியம்...நம்ம தமிழ்நாடா இது...பிப்ரவரியிலும் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் மழை!
சென்னை: தமிழகத்தின் சென்னை, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 3 மாவட்டங்களில் கடுமையான லாக்டவுன் அமல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு பருவமழை செய்த புண்ணியம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் முக்கியமான ஆறு, அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது. வழக்கமாக பிப்ரவரி மாத தொடக்கம் முதல் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும்.
சென்னையில் சாரல் மழை
ஆனால் தற்போது தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் நேற்று மாலை பல இடங்களில் பரலாக மழை பெய்தது. எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தண்டையார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
விழுப்புரம், கடலூரில் பரவலாக மழை
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்த்தில் பண்ருட்டி, விருத்தசலம், நெய்வேலி, வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் மழை கொட்டியது. மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி, திருக்கடையூர், சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பூம்புகார், திருமுல்லை வாசல், வானகிரி உள்ளிட்ட 26 கிராம மக்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி, சாத்தான் வலசை, பிரப்பன்வலசை, அரியமான் உள்ளிட்ட இடஙக்ளில் மழை கொட்டியது.
புதுவையில் கனமழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, நெய்யார், பாதிரி, இளங்காடு பகுதியில் மழை பெய்தது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்
நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 150 மிமீ (15 செ.மீ ) மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.