அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: இந்தியப்பெருங்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியையொட்டி இந்திய பெருங்கடல் வரை நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மரக்காணம், திண்டிவனம், மணிமுத்தாறு,வேதாரண்யம், ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், மேட்டூர், பரங்கிப்பேட்டை, ஆலங்குடியில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.