பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி
சென்னை : பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை மறுக்கவில்லை என மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் உளவு பார்த்ததாக பிரதமர் மோடி தமையிலான பாஜக அரசை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தெகலான் பாகவி, மதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அரசியல்வாதிகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை உளவு பார்த்து இருக்கிறது.
கட்சிகள் உடைப்பு
இந்த பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை மறுக்கவில்லை. எனவே இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மக்களை பாதுகாக்காமல் மோடி, அமித் ஷா வின் அதிகாரத்தை பாதுகாக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
ராணுவ ஆயுதம்
இதனிடையே பெகாசஸ் வெறும் செயலி மட்டுமல்ல அது ராணுவ ஆயுதம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும் போது, பெகாசஸ் செயலியை வாங்கவில்லை என மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.
ஆயுதமாக்கிவிட்டது
பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு அரசியல் சட்டம் வழங்கிய அத்தனை அமைப்புகளையும் ஆயுதமாக்கி வருகிறார்கள் ஸ்டேன் சாமி உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை கண்காணிக்கவே பெகாசஸ் செயலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டான் சாமியின் மரணத்தை ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையமே கண்டித்துள்ளது. எதிர்கட்சி தலைவர்கள் , பத்திரிகையாளர் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் கோகாய்
பெகாசஸ் செயலி மூலம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்யை மிரட்டி தங்களுக்கு தேவையான தீர்ப்புகளை பெற்றுக்கொண்டது மத்திய அரசு. மோடி அரசு கார்ப்பரேட் மதவாத கூட்டணி. கார்ப்பரேட் கம்பெனிகளும் இந்துத்துவ சக்திகளும் கூட்டணி சேர்ந்து நடத்துகின்ற அரசு மோடி அரசு
Recommended Video
தொடரும்
பெகாசஸ் மென்பொருளை திரும்பப் பெறுவது மட்டுமல்ல அது குறித்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல மோடி அரசாங்கத்தை விரட்டுகின்ற வரை இந்த போராட்டம் தொடரும் அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக இருக்கும்" ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.