நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... எம்ஜிஆர் பாடல்களை மேடையில் பாட மனப்பாடம் செய்யும் மோடி
திருக்குறள் மட்டுமல்ல எம்ஜிஆர் பாடல்களையும் இனி மோடியின் வாயால் கேட்கலாம். எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இருந்து பிரபலமான பாடல்களை தேர்வு செய்து மனப்பாடம் செய்து வருகிறாராம் பிரதமர் மோடி.
சென்னை: தமிழக தேர்தல் பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த சினிமாக்களில் இருந்து பாடல்களை பாடி தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறாராம் பிரதமர் மோடி. இதற்காகவே எம்ஜிஆர் நடித்த படத்தில் இருந்து பிரபல பாடல்களை மனப்பாடம் செய்து வருகிறாராம். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்பது தொடங்கி நாளை நமதே வரை பல பாடல்களை கேட்டு வருகிறாராம் மோடி.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. பங்குனி மாத வெயிலை விட பட்டையை கிளப்பப்போகிறது சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம். அதிமுக, திமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பல கட்சி அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய தயாராகி வருகின்றனர்.
நட்சத்திர வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டனர். பிரம்மாண்ட மேடைகளில் பேசும் பேச்சுக்களை விட குட்டிக்கதைகளும், சினிமா பாடல்களும் பாடி பிரச்சாரம் செய்வது மக்களின் மனதில் எளிதில் நிற்கும். ஜெயலலிதா தனது பிரச்சார பயணத்தில் குட்டிக்கதைகளை அதிகம் சொல்வார். அவ்வப்போது எம்ஜிஆர் பாடல்களைப் பாடுவார்.
எம்ஜிஆர் ரசிகர்கள்
தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் பலர் எம்ஜிஆர், ஜெயலலிதா ரசிகர்கள்தான். எம்ஜிஆருக்காவும், இரட்டை இலை சின்னத்திற்காகவும்தான் பல வாக்காளர்கள் இன்றைக்கும் அதிமுகவிற்கு வாக்களிக்கின்றனர். எம்ஜிஆர் வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் தனது பக்கம் தக்கவைத்தவர் ஜெயலலிதா. கடந்த 40 ஆண்டு காலமாக இரட்டை இலைக்கு விழும் வாக்குகள் அப்படியேதான் இருக்கின்றன.
ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த போது பாடிய பாடல்கள் இன்றைக்கும் பலரது இல்லங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. எதிர்கட்சியினரின் தொலைக்காட்சிகளில் கூட எம்ஜிஆர் பாடல்கள்தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
ஆட்சியை பிடித்த எம்ஜிஆர்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று பாடினார் எம்ஜிஆர். அவர் பாடியது. அவர் பாடியது போலவே ஆணையிடும் காலமும் வந்தது. 10 ஆண்டு கால ஆட்சியை இன்றைக்கும் கொண்டாடி வருகின்றனர் எம்ஜிஆர் ரசிகர்கள். புதிதாக கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனும் நாளை நமதே என்று சொல்லி எம்ஜிஆர் ஆட்சியை தரப்போவதாக கூறி வாக்கு சேகரிக்கிறார்.
எம்ஜிஆரின் ராசி
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இன்றைக்கும் பலரால் மந்திரம் போல உச்சரிக்கப் படுகிறது. காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ. தான் நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று பாடி பாடியே ரசிகர்களை கவர்ந்தவர் எம்ஜிஆர். அரசியலில் அவருக்கு என்று ஒரு ராசி இருந்தது. அதே பாணியில் மக்களை கவர்ந்து வாக்குகளை அள்ளி ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா.
எம்ஜிஆர் பாடல்கள் பாட மோடி முடிவு
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பலமுறை தனது பிரச்சாரத்தில் எம்ஜிஆர் பாடல்களை பாடி வாக்கு சேகரித்துள்ளார். பிரதமர் மோடியும் பலமுறை எம்ஜிஆரை புகழ்ந்து பேசியிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் பிரச்சார பயணத்தில் எம்ஜிஆர் பாடல்களை பாட முடிவு செய்திருக்கிறாராம். வயதான வாக்காளர்கள் மட்டுமல்ல இளைய தலைமுறையினரும் எம்ஜிஆர் பாடல்களை காலர் ட்யூனான வைத்திருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே எம்ஜிஆர் பாடல்களின் மீது மோடியின் கவனம் திரும்பியுள்ளதாக கூறுகின்றனர் பாஜகவினர்.
தமிழில் பேசப்போகும் மோடி
தமிழகத்திற்கு மோடி வரும் போதெல்லாம் வணக்கம் சொல்லி பேச்சை ஆரம்பிப்பார். அவ்வப்போது இடத்திற்கு தகுந்தாற்போல திருக்குறளை சொல்லி அசத்துவார். அதற்கு விளக்கமும் சொல்லிவிடுவார். இனி மோடி பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர் பாடல்களை பாடி அசத்தப்போகிறாராம். அவரது பேச்சு எம்ஜிஆர் ரசிகர்களை மட்டுமல்லாது தமிழக வாக்காளர்கள் பலரையும் கவர வேண்டும் கவர்வாரா? தனது பிரச்சாரத்திற்கு வரும் அனைவரையும் பாஜகவிற்கு சாதகமான வாக்குகளாக மாற்றுவாரா மோடி பார்க்கலாம்.