மோடி ஆட்சி ஏழைகளுக்கானது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.! உரக்க சொன்ன மத்திய அமைச்சர்
சென்னை: பாஜக ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தையே கிடையாது என பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விரைவில் தமிழகத்திலும் தாமரை மலர்ந்தே தீரும் என உறுதிபட கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்டம் இன்று துவங்கி, வரும் ஆகஸ்ட் 11 முதல் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை பிரதமா் மோடி தனது வாராணாசி தொகுதியில் இன்று துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் பலரும், தங்களது கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை துவக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
மற்ற கட்சிகளை போல பாஜக குடும்ப கட்சி அல்ல, தொண்டர்களின் கட்சி என்ற மத்திய அமைச்சர், மற்ற கட்சிகளுக்கு அவர்களது குடும்பம் தான் முக்கியம். ஆனால் பாஜக-விற்கு தேசமே பிரதானம் என்றார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று, தனித்தே 303 இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகளை போல பாஜக வாக்குகளை பணம் குடுத்து வாங்கவில்லை.
இறையாண்மை கொண்ட நாடு இந்தியா. எனவே பாஜக யாரையும் பிரித்து பார்க்கவில்லை . நாட்டிலுள்ள மாநிலங்களில் ஏறக்குறைய 13 மாநிலங்களில் சுமார் 50 சதவீத வாக்குகளை எங்கள் கட்சி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 15 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை.
மேற்குவங்கத்தில் மம்தா பல இடையூறுகளை ஏற்படுத்திய போதும் அத்தனை தடைகளையும் தகர்த்து, பாஜக அங்கே பல தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அவர் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறினால் கைது செய்ய உத்தரவிடுகிறார் மம்தா. ஆனால் நாங்கள் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று உரக்க கூறுவோம் . என்ன செய்து விட முடியும் மம்தாவால் என கேள்வி எழுப்பினார்.
தென்னிந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழகத்தில் பாஜக வலுவாக கால் தடம் பதிக்கும். தமிழகத்திலும் விரைவில் தாமரை மலர்ந்தே தீரும். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி இன்று நாட்டின் பிரதமராக உள்ளார். அவரை போல் கடினமாக உழைத்தால் கண்டிப்பாக நாமும் பல உயர் பதவிகளை அடையலாம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது ஏழை எளியோருக்கானது. மோடி அரசு ஏழைகளுக்கான அரசு, அவரால் மட்டுமே ஏழை மக்களை உயர் நிலைக்கு கொண்டு வர முடியும் என்றார்.