சிமி மாஜி மாவட்ட தலைவர்தான் கோவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீன்!
சென்னை: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்தவர்தான் கோவையில் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி முகமது அசாருதீன் என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தாக்குதல்களை நடத்திய சஹ்ரானுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தவர் முகமது அசாருதீன். KhilafahGFX என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை அசாருதீன் நடத்தி வந்தார்.
இலங்கையில் விசாரணைகளை முடித்துவிட்டு திரும்பிய கையோடு மே 30-ல் அசாருதீன் மீது வழக்குப் பதிவு செய்தது என்.ஐ.ஏ. இதனையடுத்தே கோவையில் சோதனைகளை நடத்தி அசாருதீனை கைது செய்தனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.
அசாருதீனின் கூட்டாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவராக அசாருதீன் செயல்பட்டு வந்திருக்கிறார்.
அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சிமியின் மற்றொரு துணை அமைப்பான வஹாத்-இ-இஸ்லாமி இந்த இயக்கத்தின் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் அசாருதீன். இதனைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஈடுபட்டுள்ளது.
அதேகால கட்டத்தில் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட இலங்கை சஹ்ரானுடனும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. சஹ்ரானின் வீடியோ உரைகளை முன்வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அசாருதீன்.
அவர்களது நோக்கம் தமிழகத்திலும் தென்னிந்திய நகரங்களிலும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்பதுதான் என்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.