இன்னைக்கு ராத்திரி நேரம் ரொம்ப முக்கியமானது.. யாருக்கு தெரியுமா?
நாளை தேர்தலை முன்னிட்டு இன்று பணப்பட்டுவாடா அதிகமாக நடக்க உள்ளதாக தெரிகிறது.
சென்னை: இன்னைக்கு ராத்திரி ரொம்ப முக்கியமான நேரம்.. யாருக்கு தெரியுமா? எல்லாம் நம்ம கட்சிக்காரங்களுக்குதான்!
பணப்பட்டுவாடான்னு வந்துவிட்டால் தேர்தல் விதி, பறக்கும்படை, அதிகாரிகள் என எதற்குமே அசர மாட்டார்கள் நம்ம தலைகள்!
நீ ஒரு பக்கம் சோதனை போடு.. நான் ஒரு பக்கம் பணத்தை அள்ளி விடறேன் என்று ஒவ்வொரு கட்சியிலும் டீம் இறங்கி விட்டது!
எனக்கே விபூதி அடிக்க பாத்தல நீ... 49P இருக்கு... உங்கள் ஓட்டு, உங்களுக்கே
ஊருக்கு வெளியே
பரமக்குடி பகுதியில் பணப்பட்டுவாடா எப்படி நடக்குது தெரியுமா? ஊருக்குள்ளே இப்படி சமாச்சாரமே நடக்கிறது இல்லை. பரமக்குடி அருகே அரியனேந்தல் , வேந்தோணி பகுதி, அபிராமம் அருகே பில்லந்தை - மண்டல மாணிக்கம் செல்லும் பகுதிகளில் வாக்காளர்களை வரவழைத்து விடுகிறார்களாம். அங்கேதான் கலர் கலராக பட்டுவாடா செய்யப்படுகிறது.
பிரதான கட்சிகள்
இப்படி பரமக்குடி என்று குறிப்பாக இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலான நிலை இதுதான். அதுவும் பாரபட்சம் பார்க்காமல் பிரதான கட்சிகளுமே இதில் அடக்கம்தான். அதிமுக, திமுக, அமமுக என்று யாரையுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்த லிஸ்ட்டில் கொஞ்சமும் நாம் சேர்க்க முடியாது... சேர்க்கவும் கூடாது!
எவ்ளோ தந்தாங்க?
ஆனால் அமமுக 300 ரூபாய், திமுக 500 ரூபாயாம்.. அதுவே அதிமுக 1000 ரூபாயாம்! வீட்டுக்குவீடு பெரும்பாலான இடங்களில் மக்கள் இப்படித்தான் வாங்கி வருகிறார்கள். "இவ்வளவு தந்துவிட்டு போனாங்க.. அங்க அவ்வளவு தந்துவிட்டு போனாங்க.. உங்களுக்கு எவ்ளோ தந்தாங்க.." என்று வழக்கமான டயலாக்குகள் ஆங்காங்கே கேட்க முடிகிறது.
ஓட்டுக்கு பணம்
இன்னைக்கு ராத்திரிதான் கடைசி நாள் என்பதால், தமிழகம் முழுக்க பணம் பட்டுவாடா நடக்க போகிறது. தேர்தல் பறக்கும் படையினர் இதனை எப்படி தடுத்து நிறுத்த போகிறார்களோ, எந்த அளவுக்கு கட்டுப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஓட்டுக்கு பணம் தருவதையும், அதை வாங்கும் நம் மக்களையும் சத்தியமா திருத்தவே முடியாது!