உஷாரய்யா.. உஷாரு... கூகுள் பே, போன் பே மூலம் பணம் திருடும் கும்பல்
சென்னை: பண பரிவர்த்தனை செயலிகளின் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டு வரும் செல்போன் அழைப்புகளை நம்பி தங்கள் கணக்கில் இருந்த பணத்தை இழந்தவர்கள் ஏராளம். போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை மோசடி செய்து வந்த மோசடி கும்பல், தற்போதைய மாற்றத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலம் மோசடி செய்து வருகின்றனர்.
வங்கி பரிவர்த்தனை செயலிகளை போல, பல்வேறு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாடுக்கு குவிந்து கிடக்கின்றன. பே - டிஎம் (PAYTM), கூகுள் பே(Google pay), போன் பே (Phone pay) போன்ற எண்ணற்ற செயலிகள் பரிவர்த்தனைக்கு எளிதாக இருப்பதால் வாடிக்கையாளர் தேநீர் கடை முதல் பல்வேறு கடைகளில் இது போன்ற செயலிகளை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், செயலிகளின் சேவை மைய எண் என போலியான எண்களை மோசடி கும்பல் கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களிடம் பணம் சுருட்டுகின்றனர்.
ஆன்லைன் மூலம் மோசடி
சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியை பவுலின் என்பவர் தனது செல்போனிலுள்ள கூகுள்- பே செயலி மூலம் அனுப்பிய ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை ஆகவில்லை என கூகுள்- பே சேவை மைய எண்ணை கூகுளில் தேடியுள்ளார். கூகுளில் கிடைத்த போலியான எண்ணை அதிகாரபூர்வ சேவை எண் என கருதி தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் சேவை மைய ஊழியர் போல் பேசிய மோசடி நபர், பவுலின் செயலியில் பதிவு செய்து வைத்துள்ள செல்போன் எண்ணை மட்டும் வாங்கி அதை, மோசடி நபரின் கூகுள் பே செயலியில் பதிவிட்டு அதன் மூலம் அவரது வங்கி கணக்கு, யூபிஐ விவரங்களை எடுத்துள்ளார்.
மோசடி கும்பல் கைவரிசை
அதன் பின்னர், 50 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது மோசடி கும்பல். இதே பாணியில் பல்வேறு பரிவர்த்தனை செயலிகளின் பேரில், போலி சேவை எண்ணை கொடுத்து லட்சகணக்கில் மோசடி செய்துள்ளனர் என்கின்றனர் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீசார். இதே போல், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் அமேசான், பிளிப்கார்டு, ஸ்நாப் டீல் போன்ற ஆப்களின் கஸ்டமர்கேர் எண் மூலமும் மோசடி நடப்பதாக கூறப்படுகிறது.
சராசரியாக 10 புகார்கள்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 புகார்களாவது பதிவாகிறது. அதேவேளையில் வாடிக்கையாளர்கள் சேவை எண் 10 இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களாக இருந்தால் அவற்றை தொடர்புகொள்ள கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.
110 கோடி ரூபாய் திருட்டு
இதற்கிடையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின், வங்கிக் கணக்கும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதாம். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் நீங்கள் பதிவேற்றும் படங்கள், அதன் பின்னணி இவற்றை கண்டறிந்து மோசடி கும்பல் கைவரிசை காட்டுவதாக கூறப்படுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 110 கோடி ரூபாய் பணம் திருடு போய் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
தேவையற்ற செயலிகள்
அதே நேரம் நாம் பயன்படுத்தும் செல்போனில் தேவையற்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது என்கின்றனர் இணைய பாதுகாப்பு நிபுணர்கள். ஆன்லைன் திருட்டுகளை தவிர்க்க பல்வேறு தனியார் அமைப்புகளும், சைபர் கிரைம் நிபுணர்களும் இருந்தாலும் கூட, நம்முடைய பங்களிப்பும் இங்கு அவசியமான ஒன்று.