அடுத்தடுத்து அதிர்ச்சி.. முதல்வர்களே வீதிக்கு வந்து போராடும் நிலைமை.. நாட்டில் என்ன நடக்கிறது?
Recommended Video
சென்னை: நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. முதல்வர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக, தொழிலாளர்கள் உட்பட எந்த ஒரு உழைக்கும் தரப்பாக இருந்தாலும் அல்லது பொதுமக்களாகவே இருந்தாலும் தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதை ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்துள்ளோம்.
மாநில முதல்வரின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டி விடாதா என்பதற்காகத்தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழக்கம்.
போராட்டங்கள் கூட தேவையில்லை.. தங்களது குறைகள் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகளாக வந்த, அது, முதல்வர் அல்லது அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றால் கூட போதும் என்று நினைக்க கூடிய பொதுமக்கள் ஏராளமாக உள்ளனர். இதற்காகத்தான் ஊடகங்களில் புகார் பெட்டி என்ற ஒரு தனி செய்திப்பிரிவு வெளியிடப்பட்டு வருகிறது.
யாரிடம் முறையிடுவது
இப்படி குறைகளை களைந்து வைக்கக்கூடிய சர்வ அதிகாரமும் பெற்ற, மாநில முதல்வர்களே, இப்போது போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காலத்தின் கோலம் என்று தான் கூற வேண்டும். ஒரு செவி வழி செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராமர் ஒருமுறை தனது கோதண்டத்தை தேரையின் தலைமீது வைத்து நின்றிருந்தார். அங்கிருந்து கிளம்பும்போது கோதண்டத்தை எடுக்கும்போதுதான் தேரை கீழே இருந்ததை கவனித்தார். அப்போது தேரையை பார்த்து "நான் உன் மீது வில்லை வைத்த போதே வலிக்கிறது என்று சொல்லி இருக்கலாமே.. எதற்காக சும்மா இருந்தாய்" என்றாராம். அதற்கு பதிலளித்த, தேரை "யாராவது துன்புறுத்தினால் ராமா என்று அபயக்குரல் எழுப்பலாம்.. சாட்சாத் ராமபிரானே என் மீது வில்லை வைத்தால், நான் யாரை உதவிக்கு அழைப்பது" என்று தேரை கேட்டதாக செவிவழி தகவல் ஒன்று உலவுவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
முதல்வர்கள் நிலைமை
இப்போது பல்வேறு மாநில முதல்வர்கள் நிலைமையும், ராமர் வில்லுக்கு கீழே சிக்கிக்கொண்ட தேரை போன்ற நிலையில்தான் உள்ளது. மக்கள் அனைவருமே முதல்வர் கவனத்திற்கு புகார் சென்றால் தீர்த்து வைக்கப்படும் என்று நம்பும் நிலையில், முதல்வர்களே இப்பொழுது போராட்டத்தில் குதித்துள்ளனர். சமீப காலமாக இந்த போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போராட்டங்கள்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டு நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். மாநில சுயாட்சியை மத்திய அரசு நசுக்குகிறது என்பதே இந்த போராட்டத்தின் நோக்கம். இதன் பிறகு இரு தினங்களுக்கு முன்பாக, டெல்லியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஆந்திராவுக்கு மத்திய பாஜக அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி அவர் போராட்டம் நடத்தினார்.
புதுச்சேரி முதல்வர் போராட்டம்
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இந்த நிலையில்தான் நேற்று மதியம் முதல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலகம் எதிரே அமர்ந்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அமைச்சரவை சகாக்களும் இதில் பங்கேற்றுள்ளனர். மாநில அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.
மாநில சுயாட்சி
மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் ஒரு நூல் இணைப்பு இருப்பது நன்கு புலப்படுகிறது. மாநில அரசுகள், மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்பது பிரச்சினைக்கு காரணம் என்பது இதில் தெரியும் ஒரு விஷயம். மாநில அரசுகள், மத்திய அரசின் அல்லது மத்திய அரசின் பிரதிநிதியின் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன என்பது மற்றொரு விஷயம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அறிஞர் அண்ணா ஆட்சி காலத்திலிருந்தே, மாநில சுயாட்சி என்பதற்கு தமிழக அரசுகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இப்போது புரிகிறதா, மாநில சுயாட்சியின் மகத்துவம் என்ன என்பது? மாநில சுயாட்சி இல்லை என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர்களே, வீதியில் உட்கார்ந்து வெயிலிலும், கொட்டும் பனியிலும், போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்புறம் மக்களின் கோரிக்கை எப்படி நிறைவேறும்? நிறைவேறாது என்பதுதான் கண்முன் நிதர்சனம்.