தமிழகம் செய்யும் சூப்பர் விஷயம்.. இனி நல்ல காலம்தான்.. மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. ஆனால், இனிதான் முக்கியமான திருப்புமுனை நிகழ இருப்பதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் மகிழ்ச்சி தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் சமீபகாலமாக எழுந்துள்ள ஒரு கேள்வி என்னவென்றால்.. மருத்துவத்துறையில் சிறப்பான கட்டமைப்பு கொண்ட ஒரு மாநிலமான தமிழகத்தில், அதுவும் அருமையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களைக் கொண்ட மாநிலத்தில்.. கொரோனா பாதிப்பு என்பது திடீர் திடீரென அதிகரித்துள்ளதே.. என்பது தான் அந்தச் சந்தேகம்.
அதிலும், கடந்த சில நாட்களாக தினசரி புதிய நோயாளிகள் என்பது 500க்கும் மேல் இருக்கிறது. நேற்று மிக அதிகமாக 700 பேரையும் தாண்டி சென்று அதிர்ச்சி ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 77 ஆயிரத்தை நெருங்குகிறது- ரஷ்யாவிலும் அதிக பாதிப்பு
மீட்சி
இப்படி பாதிப்பு அதிகமாக பதிவானாலும் கூட அது கவலைப்படும் விஷயமே தவிர, பீதி அடைய கூடிய ஒரு விஷயம் கிடையாது என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இதற்கு சில முக்கிய காரணங்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகம் மீட்சிப் பாதையை நோக்கி பயணிக்க போகிறது என்ற நல்ல தகவலையும் சேர்த்தே அவர்கள் சொல்கிறார்கள்.
இரு கிளஸ்டர்கள்
தமிழகத்தின் பாதிப்பை பொருத்த அளவில் இரண்டு, கிளஸ்டர்கள் முக்கிய பங்காற்றின. ஒன்று டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது, மற்றும் அவர்கள் தொடர்புகொண்டவர்களை அது தாக்கியது, ஆகிய இரண்டும் முதல் கிளஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அலை ஓய்ந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இனிமேல் விரைவில் தமிழகம், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறும் என்று ஆசையோடு தெரிவித்தார். ஆனால் கோயம்பேடு சந்தை மிகப்பெரிய கிளஸ்டர் என்ற நிலைக்கு மாறியது அதன் பிறகுதான்.
சிகிச்சைகள்
சந்தைக்கு வந்துவர்களை தொடர்பு கொண்டவர்கள், அவர்கள் சொந்த ஊருக்கு சென்று அங்கு தொடர்பு கொண்டவர்கள் என பல ஆயிரம் பேரை கோயம்பேடு சந்தை மூலம் பரவிய வைரஸ் பாதிப்பு தாக்கிவிட்டது. அதேநேரம், உடனடியாக செயல்படுவதில் வல்லவர்களான, தமிழக மருத்துவ பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், கோயம்பேடு சந்தை தொடர்புள்ளவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, சிகிச்சைகளை தொடங்கிவிட்டனர். இப்படித்தான் டெல்லி மாநாடு சென்று வந்தவர்களுக்கும், அவர்களது தொடர்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு குணமாக்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.
சமூக பரவல் இல்லை
கடந்த சில நாட்களாக, தமிழக அரசு வெளியிடக்கூடிய புள்ளிவிபரங்கள் என்பது கோயம்பேடு சந்தையில் தொடர்புகளால் ஏற்பட்ட பாதிப்பு என்பதை தெளிவாக காட்டுகிறது. எனவே இதை சமூக பரவல் என்று நாம் கூறி விட முடியாது. ஒருவருக்கொருவர் கோயம்பேடுடன் எப்படியாவது தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்களை அடையாளம் கண்டு சரிசெய்து விட்டாலே, முக்கால்வாசி பிரச்சனை முடிந்துவிடும்.
அதிக பரிசோதனைகள்
மற்றொரு முக்கியமான விஷயம், தமிழகம் மிக மிக அதிக அளவுக்கு பரிசோதனைகளை செய்து வருகிறது. இது கண்டிப்பாக பாராட்டக் கூடிய ஒரு விஷயம். உலகம் முழுக்க உள்ள அனைத்து மருத்துவர்களாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தீர்வு என்பது அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வது. அதன் பிறகு அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிப்பது ஆகிய இந்த இரண்டும் தான். இந்த விஷயத்தை தமிழகம் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் தமிழகத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் குறைவான பரிசோதனை
மொத்த பரிசோதனை அளவை எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிரா மாநிலம்தான் நம்மை விட சற்று அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு கூட இல்லை என்று அறிக்கைகள் வருகின்றன. ஆனால் அங்கு தினமும் ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டும்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் அங்கு அதிக பரிசோதனைகள் இருந்தன. ஆனால் இப்போது இல்லை. ஒருவேளை தமிழகம் அளவுக்கு அங்கு பரிசோதனை செய்யப்பட்டால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படக் கூடிய வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஏனெனில் இது அறிகுறி இல்லாமலும் பரவக்கூடிய நோய் என்பதால் அதிகம் பரிசோதனை செய்வது என்பது ஆபத்தைத் தவிர்க்கும் உற்ற உபாயமாகும். இதில் என்ன நல்ல விஷயம் என்றால், அதிகமாக பரிசோதனை செய்து, அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்கள் உடலில் வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நியூயார்க் நகரில் வெளியான ஒரு ஆய்வு முடிவு இதை நிரூபிக்கிறது.
தடுப்பு அரண்
சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் உடலில் ஆறு வாரங்களுக்குள் ஆண்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவர்களை கொரோனா வைரஸ் தாக்கம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் பிறருக்கு நோயை கடத்த மாட்டார்கள் என்கிறது அந்த ஆய்வு. எனவே, அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து நோய் தாக்கத்தை அடையாளம் காணுவதன்மூலம், அவர்கள் சிகிச்சைக்கு உட்பட்டு, உடலில் வைரசுக்கு எதிரான தடுப்பு அரணை பெறுகிறார்கள்.
பரவாது
எனவே அவர்கள் எந்த ஊருக்கு பயணித்தாலும் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாது, அவர்கள் மற்றவர்களுக்கும் கடத்த மாட்டார்கள். இது நோய் பரவலின் வேகத்தை மிகவும் குறைத்து விடும். தமிழகத்தில் நோய் பாதித்தவர்கள் இறப்பு விகிதம் என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. அதிலும் சுவாசக் கோளாறு வேறு பல உடல் உபாதைகள் உள்ளோர்தான் இறந்தனர். இது தவிர வைரஸ் பாதிப்பு காரணமாக நேரடி தாக்கத்தால் உயிரிழந்தது மிக சொற்பம். எனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து யாரும் பீதியடைய வேண்டாம்.
நோயாளிகள் எண்ணிக்கை குறையும்
கொரோனா நோயாளிகளின் பலி எண்ணிக்கை குறைவாக இருப்பது- சோதனைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது- ஆகிய இரண்டும் தமிழக மருத்துவத் துறையின் சாதனைக்கு ஒரு மைல்கல். கோயம்பேடு சந்தை உடன் தொடர்பு உள்ளோர்கள் அடையாளம் காணப்பட்டு, அனைவரும் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் தமிழகத்திற்கு காத்திருக்கும் நல்ல செய்தி. ஆனால் ஒரே ஒரு விஷயம். டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன, அது மற்றொரு கோயம்பேடு சந்தை போல மாறாமல் இருக்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும்தான், இப்போது தமிழகத்தில் ஒரே எதிர்பார்ப்பாகும்.