தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகள் அதிரடி
சென்னை: தமிழகத்தில் 1,633 தனியார் பள்ளி வாகனங்களுக்கு சிறப்பு தணிக்கை சான்று வழங்க மறுக்கப்பட்டதாக போக்குவரத்து துணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 33,052 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த மாதம் துவக்கம் முதலே தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் போக்குவரத்து துறை, கல்வித்துறை மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாம்பரம் அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றின் பேருந்தில் இருந்து, பள்ளி சிறுமி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பள்ளி பேருந்தின் இருக்கைக்கு அடியில் ஏற்பட்டிருந்த ஓட்டையை பலகையை வைத்து தற்காலிகமாக அடைத்திருந்தது பள்ளி ந்ர்வாகம். இது குறித்து பலமுறை புகார் கூறியும் அலட்சியமாக பதிலளித்தது. அனைவரும் பயந்தது போலவே, அந்த ஓட்டை வழியே தவறி விழுந்து பலியானார் ஒரு சிறுமி. இந்த சம்பவத்தை தொடர்ந்து தரமற்ற மற்றும் முறையான பராமரிப்பில்லாத பள்ளி பேருந்துகளால் மேலும் சில விபத்துகள் ஏற்பட்டு சில மாணவர்களின் உயிர் பறிபோனது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளின் அடிப்படையில், இனி ஆண்டு தோறும் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் மே மாதங்களில் தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனடிப்படையில் தந்போது வரை தமிழகம் முழுவதும் சுமார் 23,808 தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்துள்ளனர். ஆய்வின் போது பேருந்துகளில் ஏதேனும் ஓட்டைகள் உள்ளனவா, நன்றாக இயங்கும் நிலையில் வாகனங்கள் உள்ளதா, வாகனங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பழுது என்ன, அவையெல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதா என பரிசோதித்தனர். மேலும் அனைத்து வரிகளும் முறையாக கட்டப்பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் நன்றாக இயங்க கூடிய முறையாக பராமரிக்கப்பட நிலையில், சுமார் 22,175 வாகனங்கள் இருந்ததை அடுத்து, அவற்றை தொடர்ந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,633 தனியார் பள்ளி வாகனங்களில் குறைகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாதது கண்டறியப்பட்டது. குறைகளை நிவர்த்தி செய்து கொண்டுவர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் வாகனத்தில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து விட்டு, மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வந்தால் சரியாக இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்படும்.
இதனையடுத்து குறைகள் உள்ள பள்ளி வாகனங்களில் அதனை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த குறைகளை சரி செய்து கொண்டுவரப்பட்ட 507 வாகனங்களை மீண்டும் பரிசோதித்து அவற்றை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எஞ்சியுள்ள பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.