மெரினா சுந்தரி அக்கா கடையும்… 100 பைக்குகளை திருடிய 2 கொள்ளையர்களும்... ஷாக் ரிப்போர்ட்
சென்னை: சென்னை மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்த பின்னணி தகவல்களை தற்போது பார்க்கலாம்.
சமூக வலைதளங்கள் மூலம் மிகவும் பிரபலமான உணவகம், சென்னை மெரினாவில் உள்ள சுந்தரி அக்கா கடை என்ற அசைவ உணவகம்.
நாள்தோறும் சுந்தரி அக்கா கடைக்கு, உணவு பிரியர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறைகளில் கூட்டம் இங்கு அலைமோதுகிறது.
இந்த நிலையில், அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச்சென்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அழிவை நோக்கி செல்லும் சவுதியின் ''கேஜிஎப்''.. முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்!
பைக் திருட்டு
கடந்த பிப்ரவரி மாதம் 2ந் தேதி ஜெய்கிந்த் என்பவர் தனது குடும்பத்துடன் சுந்தரி அக்கா கடையில் சாப்பிடுவதற்காக, தனது ஸ்ப்ளெண்டர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது தனது இரு சக்கரவாகனத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
சிசிடிவி கேமரா காட்சி
இது குறித்து, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் மெரினா நீச்சல் குளம் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கள்ளச்சாவி மூலம் இரு சக்கர வாகனங்களை கொள்ளையர்கள் இருவர் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையர்கள் கைது
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றது, புதுப்பேட்டையை சேர்ந்த முகமது நவாஸ், பெரம்பூரை சேர்ந்த முகமது ரபீக் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்தின் வாகனத்தை பிரித்து விற்க முயன்ற நிலையில், அந்த இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டது.
தனி, தனியாக பிரிப்பு
மேலும், கடந்த சில ஆண்டுகளாக சுந்தரி அக்கா கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை குறி வைத்து, இரு சக்கர வாகனங்களை திருடிச்சென்றது வெளிச்சத்துக்கு வந்தது. திருடப்பட்ட வாகனங்களை புதுப்பேட்டைக்கு கொண்டு சென்று பார்ட், பார்ட்டாக பிரித்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களில் 70க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடி விற்றதும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை திருடிச்சென்று கழற்றி, பிரித்து விற்றதும் தெரியவந்தது.
போதையில் மழுப்பல்
வாகனத்தின் சொந்தகாரர்கள், கொள்ளையனை கையும் களவுமாக பிடித்து விட்டால், போதையில் வாகனத்தை தவறுதலாக எடுத்து சென்றுவிட்டதாக கூறி நழுவிச்சென்று விடுவது இவர்களின் வாடிக்கை என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்
பொதுமக்கள் கோரிக்கை
பொல்லாதவன் பட பாணியில் பைக்குகளை பார்ட், பார்ட்டாக பிரித்து விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மேலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,