மாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை!
Recommended Video
சென்னை: செந்தில்பாலாஜியுடன் அவரது ஆதரவாளர்கள் 1500க்கும் அதிகமானோர் இன்று திமுகவில் இணைய இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைகிறார் என்று தகவல்கள் வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் அண்ணா அறிவாலயத்தில் இணைய உள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
ஆதரவாளர்கள் வருகை
செந்தில்பாலாஜி திமுகவில் தனியாக இணைய போவதில்லை. அவருடன் அவரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணைய போகிறார்கள். கரூர், திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருடன் திமுகவில் இணைகிறார்கள்.
சென்னை புறப்பட்டனர்
இதற்காக எல்லோரும் சென்னை புறப்பட்டு உள்ளனர். செந்தில் பாலாஜியும் நேற்று இரவே சென்னை புறப்பட்டு இருக்கிறார். இவர்கள் இன்று காலை சென்னை வந்த பின், திமுகவில் இணைவார்கள். அண்ணா அறிவாலயத்தில் இவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.
பஸ்
இதற்காக பேருந்துகள் நேற்றே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேருந்தில் 1500க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு இன்று காலை சென்னையில் வந்து இறங்கியுள்ளனர். சுமார் 50 பேருந்துகள் இதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கணிசமான அளவில் பெண்களும் திமுகவில் இணைய உள்ளனர்.
முக்கிய நிர்வாகிகள்
கொங்கு மண்டலத்தில் டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இப்படி கட்சி மாற உள்ளனர். கரூர், திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் அதிகமான முன்னாள் அதிமுகவினரும், இந்நாள் அமமுகவினரும் இன்று திமுகவில் ஐக்கியம் ஆகிறார்கள்.