காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் கவலையை விடுங்க.. 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உறுதி
சென்னை: கொரானா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 11ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
Recommended Video
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கி, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் மிக மிக மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தேர்வு எழுதுவதற்கு செல்லவேண்டாம் என்று நினைத்து சந்தோஷப் பட்டனர்.
கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு
காலாண்டு, அரையாண்டு
ஆனால் திடீர் குழப்பம் உருவானது. அப்படி என்னதான் நடக்கிறது என்று கேட்கிறீர்களா? விஷயம் இதுதான். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி என்பதுதான் அரசு உத்தரவு. இதையடுத்து காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகளை ஆசிரியர்கள் பரிசீலித்து பார்த்தபோது ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது தமிழகத்தில் சுமார் 50 சதவீத மாணவர்கள் இந்த தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத நிலை தான் இருக்கிறதாம்.
50 சதவீதம் தேர்ச்சி இல்லை
மாணவிகள் இந்த விஷயத்தில் பரவாயில்லை. ஆனால் மாணவர்கள் பொதுவாக, வகுப்பு தேர்வுக்கு ஒழுங்காக தயாராகுவது கிடையாது. பெரும்பாலான மாணவர்கள் பொதுத் தேர்வில் பாஸ் செய்தால் போதும் என்ற மனநிலையில் மெத்தனமாக படித்திருப்பார்கள். எனவேதான் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் சில பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும், அரசு பள்ளிகளில்தான் இந்த நிலை அதிகமாக உள்ளது. இந்த மதிப்பெண்களை வைத்து, பாஸ் என்று அறிவித்தால் 50% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பல பள்ளிகளில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களும் இல்லை. தனியார் பள்ளிகள் பொதுவாக விடைத் தாள்களை பெற்றோரிடமே அளித்துவிட்டன. இதனால், மதிப்பெண்ணை சரிபார்ப்பது இயலாத காரியமாக மாறியது.
தனியார் பள்ளிகளில் முறைகேடு
இந்த நிலையில்தான், பல பெற்றோரும், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அல்லது வேறுவகையில் ஆசையை தூண்டி, தங்கள் மகன் அல்லது மகளை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாக காண்பிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி வேலைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோல மோசடி செய்து மதிப்பெண்களை திருத்தினால் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
அடுத்து என்ன?
ஒருபக்கம் அனைவரும் பாசாக மாட்டார்களோ என்ற மாணவர்களின் அச்சம், மற்றொரு பக்கம் பள்ளி நிர்வாகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடும் சில பெற்றோர், என, இரட்டை தலைவலி ஏற்பட்ட நிலையில், கல்வித்துறை ஒரு அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளாராம். அரசின் இந்த உத்தரவால் மதிப்பெண் கணக்கீடு பற்றி ஆசிரியர்கள் இடையே நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.