அடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் முன்னெப்போதையும் விட அதிகமாக அலைமோதுகிறது.
கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இதையொட்டி இந்த சந்திப்புக்கு முன்பாக சில நாட்களாக தொடர்ந்து சுற்றுலா பயணிகள் யாரையும், மாமல்லபுரத்தில் அனுமதிக்கவில்லை. அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில் வளாகம், கிருஷ்ணர் வெண்ணை உருண்டை பாறை, உள்ளிட்ட மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்த இடங்கள் அனைத்துமே மிக மிகத் தூய்மையாக சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது, சாலைகளும் புதிதாக செப்பனிடப்பட்டு பளபளத்தன. புதிய மின் விளக்கு அலங்காரம் பெயிண்டிங் என மாமல்லபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டு மெருகேறி காணப்படுகிறது.
நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு, அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே நேற்று மதியம் முதல், சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் நோக்கி படையெடுக்க தொடங்கினர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இன்னும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
அதிலும்கூட முந்தைய விடுமுறை தினங்களை விடவும் இந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக மிக அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம், மெருகேறி புதுப்பொலிவுடன் காணப்படக்கூடிய மாமல்லபுரத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டு இருப்பதுதான்.
இன்னும் சில நாட்கள் ஆனால், மாமல்லபுரம் பழைய நிலைக்கே திரும்பிவிடும். இப்போது எவ்வாறு இருக்கிறதோ, அதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நடுவே ஆர்வம் காணப்படுவது தான் இந்த கூட்டத்திற்கு காரணம்.
மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு ஓட்டல்களும் இயங்குவதால் மாமல்லபுரம் முழு உற்சாகத்தோடு காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து நடத்திய சந்திப்புகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இவற்றையெல்லாம் நேரலையில் பார்த்து ரசித்த, இதற்கு முன்பு மாமல்லபுரம் வராத பொதுமக்கள் பலரும்கூட, மாமல்லபுரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, மாமல்லபுரம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.