அரசு மருத்துவமனைகளில் சோதனை.. பிணம் இருந்த இடங்களில் பணம்...ஊழியர்கள் ஓட்டம்.. பரபர தகவல்கள்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் போலீஸாரை பார்த்தவுடன் பணத்தை அப்படியே போட்டு விட்டு பிணவறை ஊழியர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் ஏழை கூலித் தொழிலாளிகள்தான் வருவர். அவர்கள் பல ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய முடியாததால் இதுபோன்ற அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
ஆனால் அங்கும் சில பணம் தின்னிகள் இவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உறிஞ்சி பணம்
அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுக்கும் மையங்கள், எக்ஸ்ரே எடுக்கும் பிரிவுகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகள், பிணவறைகள் என கொள்ளை கொள்ளையாக அன்றாடம் வரும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பணத்தை கறக்கின்றனர்.
வசூல் வேட்டை
இதையடுத்து புகாரின் பேரில் 10 மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. பிணவறைகளில் போஸ்ட்மார்டம் செய்து கொடுப்பதற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஊழியர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
வருகை பதிவேடு
2 அரசு மருத்துவமனைகளில் பிணவறைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வருவதை பார்த்துவிட்டு ஜன்னல் வழியே பணத்தை வீசிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது போல் ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் மையங்களிலும் எக்ஸ்ரே பிரிவிலும் வேலை பார்க்கும் ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டனர்.
அதிகாரிகள்
இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர். இந்த சோதனையில் பெருவாரியாக பணம் ஏதும் கைப்பற்றாவிட்டாலும் இதை ஒரு ஆவணமாக கருதி ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.