வெளுத்து வாங்கும் மழை.. மடமடவென நிரம்பும் அணைகள்.. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி
சென்னை: இந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக அமைந்துள்ளதால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. அங்கு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக அங்குள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பருவமழை காரணமாகக் காவிரி ஆற்றில் வரும் நீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான அணைகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் பாருங்க மேட்டூர் அணைக்கு எவ்ளோ நீர்வர போகுது.. எல்லாமே புதிய வரவின் மேஜிக்.. வெதர்மேன்
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் அளவு நல்ல நிலையில் உள்ளது. கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணையைத் தவிரக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. கேஆர்எஸ் அணையையும் விரைவில் நிரம்பும்.
வரும் ஆகஸ்ட் மாத இறுதியில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி அல்லது அதைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இது மற்றொரு சூப்பர் வருடம்" என ட்வீட் செய்துள்ளார்
கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் பருவமழை தொடர்ந்து வரும் நிலையில், அணைகளின் நீர்மட்டம் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.