அம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்!
பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் தாய் - மகள் உயிரிழந்தனர்
சென்னை: சுதா மீதும், குழந்தை மீதும் பஸ்ஸின் டயர் ஏறி இறங்கியதை கண் முன்னாடியே பொதுமக்கள் பார்த்து அலறி விட்டனர்.. தாயும் - மகளும் பஸ் சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம் - சுதா.. இவர்களுக்கு ஷிவானி என்ற 5 வயது மகளும், தீபக் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுகிழமை லீவு என்பதால், சுதா தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு, கோவிலம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.. அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு டூவீலரில் குழந்தைகளை ஏற்றி கொண்டு திரும்பி வந்தார்.
கீழ்க்கட்டளை அருகே ஈச்சங்காடு மேடவாக்கம் மெயின் ரோட்டில் சுதா வந்து கொண்டிருந்தபோது, பின்னாடியே ஒரு ஆட்டோ வந்து சுதாவின் டூவீலர் மீது மோதிவிட்டது. இதில் சுதா நிலைதடுமாறி கீழே விழ, டூவீலரும் அப்படியே சாய்ந்துவிட்டது.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெளியேற்றம்.. உ.பி. போலீஸ்
இதில் சுதா உட்பட 2 குழந்தைகளுமே கீழே விழுந்துவிட்டனர்.. மகன் ஒரு பக்கம் விழ, தாயும், மகளும் இன்னொரு பக்கத்தில் விழுந்தனர்... இதில் தடுமாறி எழுவதற்குள் அந்த பக்கம் மேற்கு தாம்பரத்தில் இருந்து தியாகராயநகர் நோக்கி சென்ற அரசு பஸ் வேகமாக வந்து தாய் - மகள் மீது ஏறிவிட்டது.. இதில், சுதா, ஷிவானி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது..
இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.. ரோட்டோரம் விழுந்த மகன் தீபக் "அம்மா" என்று பீதியில் அலறினான். ஆனால் பஸ் டயர் ஏறி இறங்கியதில், தாயும், மகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பொதுமக்கள் கண் முன்னிலையிலேயே இவர்கள் துடிதுடித்து இறந்தனர்.
தகவலறிந்து பரங்கிமலை போலீசார் விரைந்து வந்தனர்.. காயங்களுடன் உயிர் தப்பிய தீபக்கை மீட்டதுடன், 2 சடலங்களையும் மீட்டனர்.. பஸ் டிரைவர் தங்கையாவை கைது செய்துள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது.