தாயில்லாமல் நாமில்லை.. தாயின்றி எவரும் பிறந்ததில்லை.. அன்னையர் தினம் இன்று..
சென்னை: தாயில்லாமல் நாமில்லை, தாயின்றி எவரும் பிறந்ததில்லை என்பதற்கேற்ப பாரே போற்றும் அன்னையர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்னையரை போற்றும் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாம் இந்த பூமியில் தோன்ற காரணமாக இருந்த அன்னையர்களை போற்றுவோம். தாய், அன்னை, அம்மா, மதர், மம்மி, அம்மே, மாதா என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அதற்கு அர்த்தம் தியாகம், உழைப்பு, பாசம், அன்பு ஆகும்.
இந்த பூமியில் பிறக்கும் ஈ, எறும்புகளிலிருந்து செடி கொடிகள் வரை, ஆணிலிருந்து பெண் வரை அனைவரும் தாயில்லாமல் பிறந்திருக்க முடியாது. அனைத்து ஜீவராசிகளையும் படைத்தது தாய் எனும் பிரம்மா ஆவார்.
Mothers day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!
கருவில் சுமக்கும் தாய்
கருவில் சுமப்பது முதல் தான் கல்லறை செல்லும் வரை தனக்காக வாழாமல் தன்னை சுற்றியிருப்போரின் நலனுக்காகவே வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார். அத்தகைய தாயின் புனிதத்தையும் தியாகத்தையும் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பிறவி பயன்
இவ்வாறு நாம் செயல்பட்டால் முதியோர் இல்லங்களே இல்லாத நிலை உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. மாதா, பிதா , குரு தெய்வம் - இந்த வரிசையில் கடவுளே தாய்க்கு பிறகுதான். எவனொருவன் தாயை போற்றுகிறானோ அவன் இப்பிறவியில் பிறந்த பலனை அடைவான்.
கேள்வி
10 மாதம் ஒரு குழந்தையோ, ஒரே நேரத்தில் இரு குழந்தைகளையோ (சிலர் 6 குழந்தைகள் வரை) சுமப்பவள். அந்த குழந்தையை பிரசவிக்கும் போது மறுபிறவி எடுக்கிறாள். அப்போதும் கூட குழந்தை எப்படி இருக்கிறது என்பதுதான் அவர் கேட்கும் முதல் கேள்வியாக உள்ளது.
மனப்பான்மை
அப்படிப்பட்ட தாய்க்கு நாம் கோவில்களை கட்டாவிட்டாலும் அவர் மனம் வருந்தும்படி நடக்காமல் இருப்போம். பல மகன்கள் இருந்தும் கவனிப்பாறின்றி தெருவில் நின்று யாசகம் கேட்டாலும் தனது மகன்களை சபிக்காத மனதிலும் திட்டாத ஒரே நபர் தாய்தான். இனியாவது தாயின் புனிதத்தையும் தியாகத்தையும் சேவை மனப்பான்மையையும் உணர்ந்து செயல்படுவோம். வாசகர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!