Mothers day: கண்ணே...மணியே.. என்றெல்லாம் அம்மா கொஞ்சமாட்டார்... நினைவுகளை அசைபோடும் சுஜாதாபாபு
சென்னை: உலக அன்னையர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான அன்னையர் தினம் மே 10-ம் தேதி(நாளை மறுதினம்) கொண்டாடப்படவுள்ளது.
தாயிடம் இருந்து பெறும் அன்பிற்கும், பாசத்திற்கும் இந்த உலகத்தில் ஈடு இணையாக எதுவும் இருக்க முடியாது. மாதாவுக்கு பிறகு தான் தெய்வமே என நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் சுஜாதாபாபு தனது தாயின் பெருமைகளையும், அவர் குறித்த நினைவுகளையும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு;
டாஸ்மாக் திறப்பு : ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமாதமிழகம்? கமல்ஹாசன்
அம்மாவின் கண்டிப்பு
'' எனது அம்மா பெயர் பிரேமா, இவர் இயல்பாகவே மிகுந்த துணிச்சல் உடையவர். குடும்பத்தில் நெருக்கடியான காலகட்டத்தில் கூட எந்த ஒரு முடிவையும் துணிந்து எடுக்கக்கூடியவர். அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட துணிச்சலால் தான் 20 வருடங்களாக என்னால் ஊடகத்துறையில் இருக்க முடிகிறது. என்னிடமும், அக்காவிடமும் கண்டிப்பு காட்டுவார். கண்ணே மணியே என்றெல்லாம் எங்களை கொஞ்சி அவர் வளர்க்கவில்லை. அதேநேரத்தில் எங்களுக்கு உரிய சுதந்திரத்தையும் அம்மா கொடுத்தார்.
அசவுகரியங்கள்
எனது அப்பா வங்கியில் மேலாளராக பணியாற்றியதால் நாங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர வேண்டி இருந்தது. சென்னை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், உடுமலைப்பேட்டை அருகே பூளவாடி, தாராபுரம், ஒசூர், ஒரத்தநாடு, கோவை, என இப்படி பல ஊர்களுக்கும் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. அங்கெல்லாம் சலிக்காமல் பொருட்களை இடமாற்றம் செய்து அசவுகரியங்களை பொறுமையாக கையாண்டார்.
உற்சாகமாக
காய்ச்சலோ, சளியோ பிடித்துவிட்டால் கவனமா இரு, வெளியே போகாதே என்றெல்லாம் கூறமாட்டார். வியாதி வந்தால் அதற்கு உரிய மருந்தை எடுத்துக்கொள் ஆக்டிவாக இரு என்றுதான் கூறுவார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் நம்மை நாமே உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என கருதுவார். இப்ப நான் பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பதை போல் எல்லாம் அவர் எங்களை வளர்க்கவில்லை.
உன்னால் முடியும் சுஜாதா.. செய்.. இதைத் தான் எப்போதும் எனது அம்மா கூறுவாரே தவிர, ஐயையோ பெண் பிள்ளை என்பதால் உன்னால் முடியாதும்மா, வேண்டாம் என்று இதுவரை சொல்லியதில்லை. பாசிட்டிவாக தான் எப்போதும் சிந்திப்பார்.
அப்பாவுக்கு நெஞ்சுவலி
எனது அம்மாவின் வைராக்கியத்திற்கு ஒன்றை மட்டும் உங்களுக்கு உதாரணமாக சொல்கிறேன், எனது அம்மாவும், அப்பாவும் தாராபுரத்தில் வசித்தபோது திடீரென ஒரு நாள் எனது தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. நான் அக்கா, தம்பி உட்பட யாரும் ஊரில் இல்லை. ஓட்டுநரும் இல்லாததால் உடனடியாக அப்பாவை மருத்துவமனை அழைத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசரம் என்றால் ஓட்டுநர்களை எதிர்பார்க்க கூடாது எனக் கருதி தனது 60 -வது வயதில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டார் எனது அம்மா. எங்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இப்படி பல உதாரணங்களை கூற முடியும். அம்மாவின் கண்டிப்பும் அவர் அளித்த சுதந்திரமும் தான் இன்று என்னை இந்தளவிற்கு உயரவைத்துள்ளது.''