'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை!
கலைச்செல்வியின் விசா மறுப்பில், மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்
Recommended Video
சென்னை: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை.. இந்தப் பாடலை யாரும் மறந்திருக்க முடியாது.. பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்வி பாடிய பாடல் இது. இப்பாடகிக்கு அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா மறுத்துள்ளது.
இவரைப் போலவே இன்னொரு இளம் பாடகருக்கும் பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி இங்கிலாந்து விசா மறுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது கனிமொழி தலையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த பார்வையற்ற இரு இளம் கலைஞர்களும் இங்கிலாந்துக்கு சென்று தாங்கள் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதவ வேண்டும்" என்று கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு
ஜெய்சங்கர்
நேற்றுதான் கனிமொழி எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் அரசுக்கு வைத்துள்ள முதல் கோரிக்கையே இந்த கோரிக்கைதான். அதாவது கனிமொழி பதவியேற்ற கையோடு தனது வேலையைத் தொடங்கி விட்டார். முன்பு சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இப்படித்தான் பலருக்கும் உதவினார். அதே பாணியில் ஜெய்சங்கர் உதவுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இசை நிகழ்ச்சி
25 வயதாகும் பிரேம் பகவான் நாகராஜு, 19 வயதான ஜோதி ஆகிய இருவரும் இங்கிலாந்தில் உள்ள பாரகன் என்ற அமைப்பின் சார்பில் இசை நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சென்னையில் உள்ள தேவசித்தம் சாரிட்டபிள் பவுண்டேஷன் என்ற அமைப்பு அழைத்துச் செல்லவிருந்தது.
இங்கிலாந்து அரசு
ஆனால் ஜோதி மற்றும் பிரேம் இருவரும் பார்வையற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா மறுத்துள்ளது. அதேசமயம், குழுவில் உள்ள மற்றவர்களுக்கு விசா கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த இருவருக்கும் விசா வழங்கக் கோரி இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித்துக்கு ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் பெட்டிஷன் போட்டு வருகின்றனர்.
ஆவணங்கள்
இவர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து எம்பி ஆலின் தெவ்லிஸும் களம் குதித்துள்ளார். ஜாவித்தை அவர் நேரடியாக சந்தித்து என்ன விஷயம் என்று விசாரித்துள்ளார். பாரபட்சம் இல்லாமல் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நாட்டின் கெளரவம் சம்பந்தப்பட்டது என்றும் அவர் ஜாவித்திடம் எடுத்துரைத்துள்ளார். ஆனால் அனைத்து ஆவணங்களும் விதிப்படிதான் பரிசீலிக்கப்பட்டதாகவும், சட்டத்திற்குட்பட்டே விசா நிராகரிக்கப்பட்டதாகவும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
|
கனிமொழி கோரிக்கை
இப்போது கனிமொழி மத்திய அரசின் கதவுகளைத் தட்டியுள்ளார். மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு கலைச்செல்வி மற்றும் பிரேமுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.