கனிமொழியின் அமைதியும் அப்செட்டும்.. என்ன காரணம்.. திமுகவில் வெடித்து கிளம்பும் ஆதரவு குரல்கள்
மாநில அளவிலான பொறுப்பு தர வேண்டும் என்று கனிமொழிக்கு ஆதரவான குரல்கள் எழுகின்றன
சென்னை: அமைதி கலந்த அப்செட்டில் இருக்கிறாராம் திமுக எம்பி கனிமொழி.. அதற்கு காரணம் மாநில அளவில் ஒரு பொறுப்பு தனக்கும் கிடைக்கும் என்று அவர் காத்திருந்ததுதான்.. இப்போதும் கூட தாமதமில்லை.. தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியையாவது கனிமொழிக்கு தரலாமே என்ற ஆதங்க கோரிக்கை திமுகவின் ஒரு தரப்பினரிடம் எழுந்து வருகிறது!
எப்படா பொதுக்குழு கூடும், மனசில் இருக்கும் ஆதங்கத்தை எல்லாம் வெளியே கொட்டிவிடலாம் என்று காத்திருந்த திமுக பிரமுகர்கள் பலர் மேலும் அதிருப்தியே அடைந்தனர்.. காரணம், பொதுக்குழுவில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் கட்சி தலைவரை உச்சத்தில் ஏற்றி பாராட்டி தள்ளியதுதான்!
பொதுவாக திமுகவை பொறுத்தவரை மாநில அளவிலான பொறுப்புதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.. அதனால் அந்த பதவிக்குதான் போட்டியும், முனைப்பும் சீனியர்கள் காட்டுவார்கள்.
பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..!
நியமனம்
மறைந்த கருணாநிதி, இந்த மாநில அளவிலான நியமனங்களில் மிக சரியான நிலைபாட்டையே கையாள்வார்.. யாருக்கு என்ன பொறுப்பு தர வேண்டும் என்ற மனக்கணக்கு போடுவதில் படுகெட்டிக்காரர்.. இந்த நியமனங்களில் எந்த குழப்பமும், அதிருப்தியும் யாருக்குமே ஏற்படாது.. அவர் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை உடன்பிறப்புகளுக்கு எப்போதுமே இருந்தது.
சலசலப்பு
இப்போது திடீரென மாநில அளவிலான பொறுப்புக்கு திடீர் சலசலப்பு ஏற்பட்டது.. காரணம், நிறைய மூத்த தலைவர்கள் இந்த முறை பதவியை கேட்டார்கள்.. பொதுச்செயலாளர் பதவி, பொருளாளர் பதவிக்கு இந்த போட்டிகள் எழுந்தன.. இறுதியில் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
ஆ.ராசா
அதேசமயம், தங்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த மூத்த தலைவர்கள் பொன்முடிக்கும், அதிருப்தியில் இருந்த ஆ.ராசாவுக்கும் துணை பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.. இது அவர்களை முழுக்க முழுக்க சமாதானம் செய்ய அளிக்கப்பட்ட பொறுப்பு என்றே பல்வேறு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
கனிமொழி
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு பிறகு கனிமொழி சற்று அப்செட் ஆகி உள்ளாராம்.. காரணம், கருணாநிதி இறந்தபிறகு தனக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என்று ஆரம்பம் முதலே எதிர்பார்த்தவர்... அதாவது, கடந்த எம்பி தேர்தல் முடிந்ததும், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் திமுகவுக்குள் பலத்த போட்டி இருந்தது.
வருத்தம்
இந்த பதவியை பிடிக்க டிஆர் பாலு - கனிமொழி இடையேதான் அதிகமான ரேஸ் இருந்தது.. அந்த பொறுப்பு தனக்கு தரப்படும் என்று பெரிதும் நம்பிய நிலையில், டிஆர் பாலுவுக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது.. திமுக மக்களவை குழு துணை தலைவராகவே கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்வு கனிமொழிக்கு கசப்பை கொடுத்ததாகவும், வருத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்பட்டது.
சுப்புலெட்சுமி ஜெகதீசன்
அதுபோலவே, சற்குணபாண்டியன் மறைவுக்கு பிறகு துணைப் பொதுச்செயலாளராக தனக்கு அந்த பொறுப்பு வரும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு தரப்பட்டுவிட்டது. இப்படி முன்பிருந்து தொடங்கிய அதே கசப்புணர்வும், அப்செட்டும் தற்போதும் கனிமொழிக்கு இருந்து வந்ததாக செய்திகள் கசிந்தன.... இந்த முறை எப்படியும் தனக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவிகிடைத்துவிடும் என்று நினைத்திருந்தார்.. அதுவும் இல்லாமல் போய்விட்டது.
கூடுதல் வருத்தம்
இது திமுகவின் ஒரு தரப்புக்கு அதிர்ச்சியையும், கூடுதல் வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. ஏனென்றால், திமுகவில் இப்போதைக்கு துணிச்சலுடன் மத்திய அரசை கேள்வி கேட்பதில் மிக முக்கியமானவர் கனிமொழிதான்.. குறிப்பாக மும்மொழி கொள்கை முதல் இந்தி திணிப்பு விவகாரம் வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்து மத்திய அரசுக்கு ட்வீட் போட்டு வருபவர்.. கட்சிக்குள்ளேயே மிக முக்கிய விவகாரம் என்றால் டிஆர் பாலுவை போலவே, அதை சாமர்த்தியமாக முடிக்கும் திறன் உள்ளவர் கனிமொழிதான்.
முக அழகிரி
இப்போது தேர்தலும் நெருங்கிவிட்டதால், கனிமொழிக்கு முக அழகிரி வசமிருந்த தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியையாவது தர வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வைக்கப்பட்டு வருகிறது.. காரணம், தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் நாடார் மக்களின் வாக்குகளையும் எளிதாக பெறமுடியும் என்பதே இவரது ஆதரவாளர்களின் கணக்கு.. அதுமட்டுமல்ல, மாநில அளவில் ஒரு பெண் பொறுப்பில் இருந்தால், அது மேலும் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்றும் கருதுகிறார்கள்.
பதவி
இப்போதைக்கு மகளிர் அணிச் செயலாளர் பதவியில் இருந்தாலும், அது ஓர் அணியின் பதவிதானே தவிர, கட்சியின் அமைப்புரீதியான பதவி கிடையாது.. அதனால், மாநில அளவிலான பதவி வேண்டும் என்பதை வாய் விட்டு கேட்கவும் முடியாமல், ஆதங்கத்தை தெரிவிக்கவும் முடியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கி வருவதாக கூறப்படுகிறது.. எப்படி இருந்தாலும் கட்சி தலைமை கடைசி நேரத்திலாவது கனிமொழிக்கு உரிய பொறுப்பை தந்து ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்கிறது அறிவாலய வட்டாரங்கள்!