"இவ்வளவுக்கு பிறகும்கூட, தன்னை விவசாயி என்று முதல்வர் கூறி கொள்கிறார்".. கனிமொழி காட்டம்
வேளாண் மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "மத்திய அமைச்சர் ஒருத்தர் ராஜினாமா செய்துவிட்டார்.. திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.... விவசாயிகள் போராடி வருகிறார்கள்.. இவ்வளவுக்கு பிறகும் கூட, தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்" என்று வேளாண் மசோதா குறித்து கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.. இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும், அதன்மூலம் அவர்களின் வாழ்வு பெருகும் என்று மத்திய அரசு நம்புகிறது.
விவசாயிகளுக்கு நன்மை பயக்காது என்றால் நிச்சயம் அதை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது, இந்த மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கையில் நன்மையே என்று நம் மாநில அரசும் ஆதரவாக சொல்கிறது.
அதாவது விளை நிலத்தில் பயிர்களை விளைவிக்கும் போது அதற்கான விலை எவ்வளவு என்பதை முன்கூட்டியே நிர்ணயித்து விட்டு, பொருளை விற்பவர்களிடம் ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால், எந்த மன உளைச்சலும் இன்றி விவசாய பணிகளில் ஈடுபடலாம் என்று அரசு சொல்கிறது.. இப்படி செய்வதால் விலை வீழ்ச்சி எனும் பிரச்சனையிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவதாகவும், விலை பொருளுக்கான விலை உத்தரவாதம் கிடைத்து விடுவதாகவும் நம்பிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்து உள்ளனர்.. போராட்டங்களின் வடிவங்களை கையில் எடுத்துள்ளனர். இதுதொடா்பாக குறைதீா்க்கும் கூட்டங்களில் விவசாயிகள் தொடா்ந்து முறையிட்டு வருகின்றனர்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மசோதாக்கள் என்று சொல்லப்படுகிறது.
இதையேதான் திமுக எம்பி கனிமொழியும் கூறுகிறார்.. விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேளாண் மசோதாக்களை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.... இவ்வளவுக்குப் பிறகும் கூட, தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மசோதாக்களை ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்" என்றார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்!
தனது ட்விட்டர் பக்கத்திலும், இந்த புதிய வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் கார்ப்பரேட்டுக்கு அடிமையாகிறார்கள், பொது விநியோக முறையை அடியோடு சீர்குலைக்க கூடிய இந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட வேண்டியது நமது கடமை என்று பதிவிட்டுள்ளார்.
கனிமொழியின் இந்த கருத்தைதான் பலரும் சொல்கிறார்கள்.. இந்த மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், இதனை திமுகவும், காங்கிரஸ் தரப்பும் ஏற்க தயாராக இல்லை.
விவசாயி என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் தமிழக முதல்வர், வேளாண்மை துறையை பெரும் காா்பரேட் நிறுவனங்களுக்கு காவு கொடுப்பது வரலாற்று பிழையாக மாறும் என்றே வலுவாக சொல்கிறது.. இந்த மசோதாக்களை யார் கேட்டது? விவசாயிகளுக்கு புதிய மசோதாக்கள் வேண்டும் என்று எந்த ஒரு விவசாயியும், விவசாயிகள் சங்கமும் கோரிக்கை வைக்காத நிலையில், இப்படிப்பட்ட மசோதாக்கள் விவசாயிகள் மீது திணிக்கப்படும் ஒரு செயலாகும்.
இந்த 3 வேளாண் மசோதாக்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும்.. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையாகும் என்பதால், அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் கொடுக்க திமுக அழுத்தமாக வலியுறுத்துகிறது!