திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை!
சென்னை ஏர்போர்ட்டின் மேற்கூரையில் மழைநீர் ஒழுகி வருகிறது
சென்னை: திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. என்றுதான் நம்முடைய சென்னை ஏர்போர்ட் இருந்தது. இப்போது பெய்த ஒரே நாள் மழையில் கூரையே பிச்சுக்கிட்டு ஒழுக ஆரம்பித்துள்ளது. இதைதான் "முதல்ல உடைஞ்சுது.. இப்போ ஒழுக வேற செய்யுது" என்று எம்பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஏர்போர்ட் சுமார் 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டது. இது புதுப்பிக்கப்பட்டு, இதன் திறப்புவிழா 2013-ம் ஆண்டில் நடந்து. ஆனால் ஒருசில மாதங்களிலேயே டமால், டிமீல் என்று ஏர்போர்ட்டுக்குள் மேற்கூரை கண்ணாடிகள் விழுந்து நொறுங்க ஆரம்பித்தன.
இப்படியே 89 முறை மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 6 பேர் இதில் இதுவரை காயமடைந்தாலும், கண்ணாடி உடைவதை இன்னமும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பல்லாயிரம் மைல்கள்கூட பெருங்கடல்களின் மேல் பயணம் செய்து பாதுகாப்பாக விமானத்தில் தரை இறங்கி விட முடிகிறது. ஆனால் சென்னை ஏர்போர்ட்டுக்குள் உயிரோடு வெளியே வருவது கேள்விக்குறியாகி விடுகிறது.
மேற்கூரை
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் மழை பெய்தது. அந்த ஒருநாள் மழைக்கே ஏர்போர்ட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஷவர் போல் கொட்டியது. இதனால் ஏர்போர்ட் ஊழியர்கள் பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் தண்ணீரை பிடித்து வெளியே ஊற்றினர்.
|
செல்போன்
இந்த சமயத்தில், அதாவது நேற்று விடிகாலை டெல்லி செல்வதற்காக ஏர்போர்ட்டுக்குள் திமுக எம்பி கனிமொழி நுழைந்தார். அப்போது, இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மழைநீரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் பிடிக்கும் காட்சியை தன்னுடைய செல்போனில் படம் பிடித்து, டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டார்.
பாத்திரம்
"சென்னை விமான நிலையத்தில் முன்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. தற்போது மேற்கூரை ஷவராக மாறிவிட்டது. மழைநீரை பிளாஸ்டிக் பாத்திரத்தில் பிடிக்கின்றனர்" என்று பதிவிட்டார். மேலும்,"முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டு விழும், இப்போது இது ஒழுக வேறு செய்கிறது" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன விஷயம்தான்
ஆனால், இதை பற்றி சென்னை விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமாரிடம் கேட்டதற்கு, "விமான நிலையத்தின் மேற்பகுதியில் சிமெண்டு தளம் கிடையாது. வெறும் சீட்டுகள்தான். அதில் இப்படி ஒரு சில இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அதை சரிசெய்துவிடுவோம். இது சின்ன விஷயம்தான்" என்கிறார்.