வரலாறு படைத்த நளினா.. இன்னும் உயர வாழ்த்துகிறேன்.. கனிமொழி ட்வீட்!
திருநங்கை நளினா பிரசிதாவுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை நளினா பிரசிதா வெற்றிபெற்றுள்ளதற்கு கனிமொழி எம்பி வாழ்த்து கூறியுள்ளார்.
திருநங்கைகளை இந்த சமூகம் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க கனிமொழி முன்னெடுத்த முயற்சிகள் ஏராளம். இன்றும்கூட திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக கனிமொழி குரல் கொடுத்து வருவதையும், இவர்களில் முக்கிய பதவி, பொறுப்பினை யாரேனும் வகித்தால் அவர்களை பாராட்டாமல் கனிமொழியால் இருக்க முடிவதில்லை. அப்படித்தான் நளினாவுக்கும் இன்று பாராட்டு கிடைத்துள்ளது.
லயோலா கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வருபவர்தான் திருநங்கை நளினா பிரசிதா. கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் இவர் போட்டியிட்டு, தற்போது துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு திருநங்கை மாணவர் தேர்தலில் வெற்றி பெறுவதும், பொறுப்பில் அமர்வதும் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை! இந்நிலையில்தான் நளினாவுக்கு கனிமொழி வாழ்த்து சொல்லி உள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.https://t.co/8FdKNhEhpg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2019
தனது ட்விட்டர் பதிவில், "சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்