அதை மட்டும் யாருமே கேட்பதில்லையே.. ஏன்.. தமிழச்சி கேட்டார் பாருங்க.. ஒரு பொளேர் கேள்வி.!
வாரிசு அரசியல் குறித்து தமிழச்சி தங்க பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "ஒரு டாக்டரின் பிள்ளை டாக்டராகும்போதோ, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும்போதோ யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி வாரிசு அரசியல் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன" என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இப்படி ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.
வாரிசு அடிப்படையில் சீட் தரப்பட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி தெருத்தெருவாக வாக்கு சேகரித்தவர் தமிழச்சி. தங்கபாண்டியன்.
கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த தங்கபாண்டியனின் மகள், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்கா என்ற பந்தங்களை தாண்டி, பூமழை தூவி இவரை தொகுதி மக்கள் வரவேற்கவும் செய்தனர்.
தென்சென்னை
20 வருடமாக இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், தமிழச்சியின் அரசியல் வருகையும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதனால்தான் தென்சென்னையில் அபார வெற்றி பெற்றுள்ளார். இப்போது எம்பியாகவும் உயர்ந்துவிட்டார்.
இலக்கியவாதி
பொதுவாக, இலக்கியவாதிகளுக்கு சமூக அக்கறை நிறைந்தே இருக்கும். அரசியல்வாதிகள் கொஞ்சம் அடக்கியே வாசித்தாலும், அவர்களைவிட அதிகமாகவே பொங்குபவர்கள்தான் இலக்கியவாதிகள். தமிழச்சிக்கும் நிறையவே உண்டு.
வாரிசு அரசியல்
ஒரு வார இதழுக்கு தமிழச்சி வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், "ஒரு டாக்டரின் பிள்ளை டாக்டராகும்போதோ, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும்போதோ யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி வாரிசு அரசியல் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தகுதியில்லாமலோ, வலுக்கட்டாயமாகவோ கட்சிப்பதவிகளில் வாரிசுகள் திணிக்கப்படுவார்களேயானால் தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம். வாரிசு என்பதாலேயே அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?" என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி
அப்படியானால் உதயநிதியின் அரசியல் வருகை, பொறுப்பு குறித்து கேள்வி கேட்டதற்கு, "அவர் முழுநேரக் கட்சிப்பணி ஆற்றவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? பகலில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதாலேயே நட்சத்திரங்கள் இல்லை என்றாகிவிடுமா?" என்ற பதிலையும் முன் வைத்துள்ளார்.
கடின உழைப்பு
உண்மைதான்.. ஆனால் டாக்டர் பிள்ளையோ, வக்கீல் பிள்ளையோ.. யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாரிசு என்பதாலேயே டிகிரி கிடைத்துவிடுவதில்லை. இவர்கள் எல்லாருமே கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதிதான் டாக்டர், வக்கீல் ஆகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதிமுக, திமுக எதுவானாலும் சரி.. வாரிசு அரசியலில் இந்த கடினமும், உழைப்பும் இருக்கிறதா என்பதுதான் நமது சந்தேகமாக இருக்கிறது.